யுகேஷ் கண்ணன்
மூப்படைதலுக்கும் மக்களின் உயிரைப்பறிக்கும் கொடூர நோய்களுக்கும் தீர்வு காண்பதற்காக உயிர் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்ததாக அனுப்பிரியா ராமமூர்த்தி, 23, கூறினார்.
இம்மாதம் 13ஆம் தேதி யேல்-சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 242 மாணவர்களில் இவரும் ஒருவர்.யேல்-சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கல்வித் திட்டத்தில் பயின்றதன் மூலம், தனது விருப்பத்தை நிறைவேற்றத் தேவையான ஆதரவும் வசதிகளும் வழங்கப்படும் என இவர் நம்புகிறார். தன் கல்வி அனுபவமே, தன்னை ஒரு விஞ்ஞானியாகவும் ஒரு மனிதராகவும் செதுக்கியதாகக் கூறுகிறார் அனுப்பிரியா.
தனது முதலாம் ஆண்டில் நிக்கோலஸ் டௌலின்ஸ்கி என்ற இணைப் பேராசிரியரின் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கிய இவர், தனது பட்டக்கல்வி முடியும் வரை அங்கேயே அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அவர் அங்கு பெற்ற ஆய்வுத் திறனும் பேராசிரியர்கள் கொடுத்த வழிகாட்டுதலும் தனது மேற்படிப்பிலும் வாழ்க்கை லட்சியங்களை அடைவதிலும் பெரிதும் உதவுமென நம்புகிறார்.
இதனால், ஒருவர் தமது வாழ்விலும் அடுத்த பயணங்களில் அவரால் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செயல்பட இயலும் என இவர் எண்ணுகிறார்.
அனுப்பிரியா தற்போது நியூ யார்க் நகரில், சினாய் மலையிலுள்ள இக்காஹ்ன் மருத்துவக் கல்லூரியில், உயிர் அறிவியல் சித்தாந்தத் துறையில் முனைவர் பட்டம் பெறப் படித்துவருகிறார். அவர் பட்டக்கல்வி பயின்றபோது, சில மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பாளராகவும் ஆலோசகராகவும் இருந்ததாகப் பகிர்ந்துகொண்டார். இதேபோல, தனது முனைவர் பட்டப்படிப்பின் போதும் தன்னால் முடிந்த வரை மற்ற மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.
இதன் மூலம் மாணவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, தனக்குக் கற்றல் துறை ஏற்றதா என்பதைக் கண்டறிய முடியும் என்கிறார். அதுமட்டுமன்றி, தனக்கு உயிர் தொழில்நுட்ப
வியல் துறையிலும் அறிவியல் ஆலோசனைத் துறையிலும் நாட்டமிருப்பதாக இவர் தெரிவிக்கிறார். ஆகையால், தனது முனைவர் பட்டப்படிப்பின்போது, தனக்குரிய ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார்.
"இறுதியில் எத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும் நல்ல ஆய்வாளராகவும் விஞ்ஞானியாகவும் வருங்கால சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்," எனக் கூறுகிறார் இவர்.
மக்கள் எதிர்நோக்கும் சில கொடிய நோய்களுக்கு ஒரு முடிவு கட்டுவதில் தனது பங்கும் உண்டு என்பது பெருமைக்குரிய ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

