மோனலிசா
செயற்கை நுண்ணறிவுடைய தானியங்கி கார், தடுப்புகளைத் தாண்டி நகரும் இயந்திர மனிதன், சமூக ஊடகத்தில் விற்பனை செய்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளில் தொழில்நுட்பக் கல்விக் கழகம், உயர்
நிலைப்பள்ளி மாணவர்களுக்காக 'இக்நைட் திறன்கள் சவால்' போட்டியை நடத்தியது. இதில் பங்கேற்ற செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சூர்யா மதுசூதன் 15, ஷர்மன் சுகதேவன் 15, தானியங்கி கார்களுக்கான நிரலாக்கத்தை உருவாக்கினர்.
"தானியங்கி கார்களை ஒரு குறிப்பிட்ட தடத்தில் செலுத்தி அதன் மூலம் வரைபடம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
"இதற்கான நிரலாக்கத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் புதிதாக பலவற்றைக் கற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற கார்களின் பயன்பாட்டினால் சாலை விபத்துகள் குறையும்," என்று கூறினர்.
பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியைத் தன் குழுவுடன் பிரதிநிதித்த வினோத்குமார் நிஷா தேவ்தர்ஷன், 15, 'நிரலாக்கம் வழி குறிபார்த்துச் சுடுதல்' பிரிவில் இரண்டாம் பரிசை வென்றார்.
"இயந்திர மனிதன் பல தடைகளைத் தாண்டி, ஒரு பொருளைக் குறிபார்த்துச் சுட வேண்டும். இறுதிப்போட்டியில் அத்தகைய தடை
களைக் கடப்பது மிகக் கடினமாக இருந்தபோதிலும் நாங்கள் 'புளோக் ப்ரோகிராமிங்' உத்தியைக் கையாண்டு இதற்கான நிரலாக்கத்தை உருவாக்கினோம்," என்று தேவ்தர்ஷன் கூறினார்.
இச்சவாலின் இறுதிப்போட்டி இம்மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமையன்று தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் ஆதரவோடு நடந்த இந்தப் போட்டியில், 51 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 420க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திறன்கல்வியின் பயன்
களையும் மதிப்பையும் மாணவர்கள் தெரிந்துகொள்ள உதவும் விதத்தில் சவால் அமைந்ததாகவும் நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா கூறினார். இவர் திறன் சவால்கள் இறுதிப் போட்டியில் பங்குபெற்றவர்களைப் பார்வையிட்டதுடன் பரிசுகளையும் வழங்கினார்.
'குரோமடோக்ராஃபி' மின்னிலக்க ஓவியச் சவால்' என்னும் பிரிவில் பங்கெடுத்த பிடோக் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவர் ஹரிஷ் இளங்கோவன், 15, "குரோமடோக்ராஃபியின் வண்ணமயமான உத்திகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் கண்கவர் புத்தாக்க கலை வடிவமைப்புகளை மின்னிலக்க வடிவில் உருவாக்கினோம். வீடுகள், கட்டடங்கள் போன்றவற்றின் உட்புறக் கட்டமைப்புகளுக்கு இந்த வண்ண வடிவமைப்புகள் உதவும்," என்று கூறினார்.

