சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சாங்கி விமான நிலையத்தில் அமைந்திருக்கும் அதன் பயணிகளுக்கான ஓய்வறைகளை மீண்டும் திறந்துள்ளது.
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் உள்ள 'சில்வர்கிரிஸ்', 'கிரிஸ்ஃப்ளையர் கோல்ட்' ஓய்வறைகள் இன்று மாலை ஆறு மணியில் இருந்து பயணிகள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
50 மில்லியன் வெள்ளி செலவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஓய்வறைகளைப் புதுப்பித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த ஓய்வறைகள் பயணிகளுக்குச் சிறந்த பயண அனுபவத்தைத் தரும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.
விமானப் போக்குவரத்துத் துறையில் 'எஸ்ஐஏ' அதன் முன்னிலை இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இத்தகைய புதுப்பிப்புப் பணி கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
நேற்று நடைபெற்ற திறப்புவிழாவில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கலந்துகொண்டார்.
புதுப்பிக்கப்பட்ட ஓய்வறைகள் மீண்டும் திறக்கப்படுவது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீள்திறனைக் காட்டுவதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் இது விமானப் போக்குவரத்துத் துறையின் சிறப்பான வருங்காலத்தை முன்னுரைப்பதாகவும் அமைச்சர் ஈஸ்வரன் கூறினார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்போது 95 இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன.

