சிங்கப்பூரர்களின் நல்வாழ்வுக்கு ஊழியர் நலத்திட்டங்களை மேம்
படுத்துவது மூலம் அரசாங்கத்துடன் நிறுவனங்கள் இணைந்து செயல்படலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
ஆரோக்கியத்தைத் தரும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி மின்னிலக்கத் தீர்வுகளை அதிகரிப்பது ஆகியவை வாயிலாக வர்த்தகங்கள் பங்களிக்கலாம் என்றார் அமைச்சர் ஓங்.
கிராண்ட் ஹயட் ஹோட்டலில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வு குறித்து ஐரோப்பிய வர்த்தக தொழிற்சபையின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஓங், இக்
கருத்துகளைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மக்களின் நல்வாழ்வு நீடித்து நிலைத்திருக்க அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அறிக்கை மேற்கோள் காட்டியது.
சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பு பெரிய அளவிலாக மறுசீரமைக்கப்படுகிறது. அதற்கு 'ஹெல்தியர்எஸ்ஜி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சு அறிவித்ததை அடுத்து சரியான நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக திரு ஓங் கூறினார்.
நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட நோய் வரும் முன் காக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மாறுகிறது.
நோய் வரும் முன் காக்கும் அணுகுமுறைக்கு கூட்டு முயற்சி மிகவும் அவசியம் என்பதை அமைச்சர் ஓங் வலியுறுத்தினார். இந்த அணுகுமுறையை முன்கூட்டியே கடைப்பிடித்தால் அது எளிதாகவும் கட்டுப்படியான விலையிலும் இருக்கும் என்றார் அவர்.
மேலும், பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் சிங்கப்பூரர்கள் அந்த நடவடிக்கைகளை ரசித்து செயல்படுவர் என்று திரு ஓங் கூறினார். அவரவர் வீடுகளில் நண்பர்கள், குடும்பத்தாருடன் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றார் திரு ஓங்.
"இந்த வித்தியாசங்கள் காரணமாக நோயைத் தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்கீழ் நோயாளிகள் பயனீட்டாளர்களாக மாறுகின்றனர். இந்த அணுகுமுறை புத்தாக்கத்துக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையின் பங்கேற்புக்கும் வாய்ப்பு தருகிறது.
சுகாதாரத்தை முன்னிட்டு பொதுத் துறை, தனியார் துறை, பொதுமக்கள் இடையே வலிமைமிக்க பங்காளித்துவத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறது," என்று திரு ஓங் தெரிவித்தார்.
புதிய அணுகுமுறையில் நிறுவனங்கள் இணைந்து பங்களிக்கக்கூடிய மூன்று அம்சங்களை அவர் மேற்கோள்காட்டினார். மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த ஊழியர் நல்வாழ்வு மிகவும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியமான ஊழியரணி கூடுதல் உற்பத்தித் திறனுக்கு காரணமாக இருக்கும் என்றார் அவர்.
அடுத்ததாக, ஆரோக்கியமான உணவுப்பொருட்களின் விலை அதிகம் என்ற எண்ணம் தவறு என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார். நோய் வரும் முன் காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் மின்னிலக்கத் தீர்வுகளை உருவாக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
இந்த மின்னிலக்கத் தீர்வுகள் மூலம் மக்களின் தூக்கம், உடற்
பயிற்சி போன்றவற்றை ஒழுங்கு
படுத்தலாம் என்றார் அவர்.

