மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் இணைவதற்கு கனடா ஆர்வம் காட்டியுள்ளதை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வரவேற்றுள்ளார்.
தொலைபேசி வழி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுடன் உரையாடியபோது திரு லீ, உடன்பாட்டில் இணைய கனடா விண்ணப்பம் செய்திருப்பதை வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உன்னத உறவை இவ்விரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர்.
பொருளியல், உள்கட்டமைப்பு, அறிவார்ந்த நகரங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் உன்னத உறவு நீடிப்பதை பிரதமர் லீயின் பத்திரிகைச் செயலாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் கனடாவின் ஈடுபாடு வளர்ந்து வருவது பற்றிப் பேசிய இரு பிரதமர்களும் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு குறித்தும் விவாதித்தனர்.
மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு என்பது உலகின் முதல் மின்னிலக்க வர்த்தக உடன்பாடு.
இதில் சிங்கப்பூர், சிலி, நியூ
சிலாந்து போன்ற நாடுகள் 2020 ஜூன் மாதம் கையெழுத்திட்டன.
தரவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள் போன்ற அம்சங்களில் மின்னிலக்கப் பொருளியலுக்கான விதிமுறைக் கட்டமைப்பை உருவாக்க உடன்பாடு வழிவகை செய்கிறது.
இந்த உடன்பாட்டில் இணையப்போவதாக சீனாவும் தென்கொரியாவும் கடந்த ஆண்டின் இறுதிவாக்கில் தெரிவித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக, இம்மாதத் தொடக்கத்தில், உடன்பாட்டில் இணையவதற்கான விண்ணப்பத்தை கனடா அனுப்பியது.
இதில் இணைந்துகொள்ளுமாறு தாய்லாந்தை சிங்கப்பூர் அழைத்ததாக தாய்லாந்து செய்தித்தளங்கள் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தன.

