பிறப்பு, இறப்பைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை ஞாயிற்றுக்கிழமை நடப்புக்கு வந்தது
அச்சடிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக மின்னிலக்கச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட முதல் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) 141 மின்னிலக்க பிறப்புச் சான்றிதழ்களை வழங்கியது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி, மேலும் 78 மின்னிலக்கச் சான்றிதழ்களை தான் வழங்கியதாக ஆணையம் கூறியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 39,100 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக ஆணையம் சொன்னது. அந்த வகையில், முன்னதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 107 அச்சடிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட மின்னிலக்கச் சான்றிதழ்களின் எண்ணிக்கை, இந்தச் சராசரியைவிட அதிகம்.
பதிவுசெய்யும் முறையை எளிதாக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, அச்சடிக்கப்பட்ட பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து வழங்கப்பட மாட்டா என ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.
மாறாக, தற்போது மின்னிலக்கச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பதிவு நடைமுறை அனைத்தும் இணையம்வழி செய்யப்படுகிறது. பிறப்பு, இறப்புப் பதிவுகளை நேரடியாக செய்யும் பதிவு முறை இனி வழங்கப்படாது.
இதற்கு முன்னதாக, குழந்தை பிறந்த மருத்துவமனையிலோ ஐசிஏ கட்டடத்திலோ குழந்தையின் பிறப்பைப் பெற்றோர் பதிவுசெய்ய வேண்டியிருந்தது.
குழந்தையின் பிறப்பை இணையத்தில் பதிவுசெய்வதற்கான தெரிவு முன்னதாக பெற்றோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அச்சடிக்கப்பட்ட சான்றிதழை மருத்துவமனையிலோ ஐசிஏ கட்டடத்திலோ அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
தங்கள் குழந்தையின் பிறப்பை 'லைஃப்எஸ்ஜி' செயலியிலோ அதன் இணையப் பக்கத்திலோ பெற்றோர் பதிவுசெய்யலாம். மின்னிலக்கச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய அவர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்படும்.
சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய அவர்களுக்கு 90 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். தங்களது மின்னிலக்கச் சாதனங்களில் அவர்கள் சான்றிதழை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
பதிவுசெய்யும் நடைமுறையில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டது குறித்து பெற்றோரிடம் இருந்து ஆணையத்துக்கு கருத்து எதுவும் கிடைக்கவில்லை என்று ஆணையப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
குழந்தையின் பிறப்பைப் பதிவுசெய்ய பெற்றோருக்கு 42 நாள் அவகாசம் வழங்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு அனைத்தையும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவது கட்டாயமாகும்.

