போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான 36 வயது தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படவிருந்த ஒரு நாளுக்கு முன்பு அதை ஒத்திவைக்க தான் எடுத்த முடிவு குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தது.
சிறைக் கைதிகளுக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட தனிப்பட்ட கடிதங்களைச் சிறை அதிகாரிகள் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பியதை எதிர்த்து தட்சிணாமூர்த்தியும் மரண தண்டனையை எதிர்நோக்கும் 12 சிறைக் கைதிகளும் மனு அளித்துள்ளனர்.
அந்த மனு நிலுவையில் உள்ள வேளையில், தமக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் தொடர்பிலான நீதித்துறை நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு தட்சிணாமூர்த்தி கோரினார். தமக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி குறிக்கப்பட்டதால், தண்டனையை எதிர்நோக்கும் 12 சிறைக் கைதிகளைவிட தாம் மாறுபட்ட முறையில் நடத்தப்படுவதாக அவர் வாதிட்டார்.
நீதித்துறை நடைமுறை மறுஆய்வு செய்யப்படுவது குறித்த முடிவு வெளிவரும்வரை தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஒத்திவைக்குமாறு ஏப்ரல் 28ஆம் தேதி காலை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூ ஷியூ பெங் உத்தரவிட்டார்.
அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் அளித்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, அதைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனையை ஒத்திவைப்பதற்கான முடிவு அதே நாள் பிற்பகல் நிலைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் வெளியிட்ட எழுத்துபூர்வ அறிக்கையில், இந்த சிவில் வழக்கில் தமது ஈடுபாடு தேவை என்பதை தட்சிணாமூர்த்தி காண்பித்துள்ளதாகக் கூறியது.
44.96 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாக 2015ல் தட்சிணாமூர்த்திக்கு எதிராக குற்றம் நிரூபணமானது. மரண தண்டனையை எதிர்த்து 2016ல் அவர் செய்திருந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

