கிளேனிகல்ஸ் மருத்துவமனையின் வர்த்தக அலுவலகத் துறையில் மேலாளராகப் பணியாற்றியபோது தாமஸ் இங் எங் ஹாவ், 48, நோயாளிகளின் மருத்துவக் கட்டணங்களை மாற்றியமைத்தார்.
மருத்துவமனை படுக்கைப் பிரிவை அவர் கீழ்நோக்கித் திருத்தினார்.
நோயாளிகள் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள் மருத்துவமனையில் இருந்து வசிப்பிடம் திரும்பிய பிறகே இங் இவ்வாறு செய்தார்.
கட்டண வித்தியாசத்தை எடுத்துக்கொண்ட அவர், தமது சொந்த செலவுகளுக்கு அதைப் பயன்படுத்தினார். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்த அவர், மூன்று ஆண்டு காலகட்டத்தில் கிட்டத்தட்ட $344,000ஐ கையாடினார்.
இங்கிற்கு நேற்று மூன்று ஆண்டு, ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $316,000க்குமேல் மதிப்புடைய தொகை தொடர்பில் நம்பிக்கை மோசடி செய்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
பொய்க் கையெழுத்திட்டதாக எட்டுக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். அவருக்குத் தண்டனை விதிப்பதில் மற்ற 30 குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.
2016க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களை இங் புரிந்தார்.
அதன் பின்னர் கிளேனிகல்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை தரப்பிலிருந்து நோயாளிகளுக்கு அதிக பணம் திருப்பித் தரப்பட்டதாக கணக்குத் தணிக்கையாளர் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இங்கின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2018 ஜனவரி 12ஆம் தேதி இங் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கிட்டத்தட்ட $11,000 மீட்கப்பட்டு, கிளேனிகல்ஸ் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2018 மார்ச் மாதம், மேலும் $48,000 பணத்தை இங் திருப்பித் தந்தார்.
இங்கிற்கு $15,000 பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 7ஆம் தேதி அவர் தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.

