தீவு விரைவுச் சாலையில் நேற்றிரவு இரண்டு விபத்துகள் அடுத்தடுத்து ஏற்பட்டன.
ஒரு விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும், வாகனும் விபத்துக்குள்ளாகின. இதன் தொடர்பில், மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாக நம்பப்படும் ஒரு 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஏழு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டன. இதில் காயம் ஏற்பட்ட இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் யூனோஸ் மேம்பாலச் சாலைக்கு அருகே விபத்துகள் ஏற்பட்டன. இது குறித்து இரவு 10.30 மணியளவில் காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது.
முதல் விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 24 வயது மணிகண்டன் வேலையிடத்திலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அவரது மோட்டார் சைக்கிள் பின்னால் ஒரு வாகனம் மோதியதாக அவர் கூறினார்.
“நான் என் மோட்டார் சைக்கிளை இறுக்கி பிடித்துக்கொண்டேன். மோட்டார் சைக்கிள் வலது பக்கமும் இடது பக்கமும் வலைந்து சென்றது. ஒருவேளையாக விரைவுச்சாலையின் ஒரு பக்கமாக வண்டியை நிறுத்தினேன். கீழே இறங்கி திரும்பி பார்த்தால், பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன,” என்றார் திரு மணிகண்டன்.
திரு மணிகண்டனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
விபத்துகள் குறித்து விசாரணை நடந்துவருகிறது.