குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்
கடல்துறையில் பத்தாண்டு காலமாகப் பொறியாளர் பணியில் இருந்த காயத்திரி, சமுதாயத்திற்கு வேறு வழியில் நன்மை அளிக்கும் பணியில் ஈடுபட நினைத்தார். கடல்துறையில் இருந்து விலகி நிதி ஆலோசகர் ஆனார் காயத்திரி தேவி, 36.
இருப்பினும், நிதி ஆலோசகர் பணியை இவர் தெரிவு செய்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. காயத்திரி பிறந்தபோதே அவரின் தாயாருக்கு 'லுப்பஸ்' என்னும் அரிய வகை நோய் இருந்தது.
அவரது வயது அதிகரிக்க, இந்நோய் அவருடைய உடல்நலத்தைச் சீர்குலைத்தது. மருத்துவக் காப்புறுதித் திட்டம் இல்லாததால் மருந்துகளுக்கும் சிகிச்சை
களுக்கும் பணம் அதிகம் செலவானது.
வேலையிடத்தில் காயத்திரியின் தாயார் மயங்கி விழுந்ததை அடுத்து அவருக்கு ஓய்வு தேவை என்று கூறி, அவரது 50வது வயதில் வேலையிலிருந்து கட்டாய ஓய்வுபெற வைத்தது அவர் பணிபுரிந்த நிறுவனம். வேலையின்றி, முன்போல் சுறு
சுறுப்பாக இயங்க முடியாமல் இவர் தாயார் நொந்துபோனார். தமது உடல்நலம் ஒருபுறம், மறுபுறம் போதுமான வருமானம் ஈட்ட வேண்டிய நிலை. மன உளைச்சலுக்கு ஆளானார் அவர்.
நீரிழிவு நோயாலும் அவர் பாதிக்கப்பட்டார். உடல்நலப் பிரச்சினைகளுடன் 25 ஆண்டு காலம் போராடியபின் காயத்திரிக்கு 25 வயதானபோது அவர் தாயார் காலமானார்.
காயத்திரியின் தாயார் தவறிய பிறகு அவரது தந்தை இரண்டு வேலைகளைச் செய்தார்.
கிடங்கில் பணிபுரிந்ததுடன் வாடகை வாகனத்தையும் ஓட்டிவந்த அவர், போதுமான ஓய்வின்றி ஒருநாள் வாகன விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மற்றொரு வாகனத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
காயத்திரியின் தந்தை உயிர் பிழைத்தபோதும் அச்சம்பவம் அவரைப் பெரிதும் பாதித்தது. குற்ற உணர்ச்சியால் மன அழுத்தத்துக்கு ஆளானார்.
இவ்வாறு தந்தை அதிக சிரமங்களுக்கிடையே குடும்பத்துக்காக உழைத்ததைப் பார்த்து வளர்ந்தார் காயத்திரி. குடும்ப நிதி நிர்வாகம் தொடர்பில் உதவவேண்டும் என்று தீர்மானித்தார்.
கடல்துறையிலிருந்து விலகிய காயத்திரி, பல வேலைகளுக்கு விண்ணப்பித்தார்.
அப்போது காப்புறுதி நிறுவனம் ஒன்று அவரை சந்தித்துப் பேச விரும்பியது. நேர்காணலுக்கு காயத்திரி சென்றபோது, அங்கு பணிபுரியும் ஒருவர், தாம் பார்க்கும் வேலையால் பல குடும்பங்கள் அடை யும் நன்மை பற்றி பகிர்ந்துகொண்டார்.
இறப்பு தொடர்பான காப்புறுதித் திட்டங்களின் வழியாக இறந்தவர் குடும்பத்தார் சிறிது காலமாவது நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடிவது குறித்தும் காயத்திரியுடன் அந்த நண்பர் பகிர்ந்துகொண்டார்.
மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட இதுவும் ஒருவழி என்பதை காயத்திரி உணர்ந்தார். அதுவரை நிதி ஆலோசகர்களின்மீது நம்பிக்கை கொள்ளாத காயத்திரி, அதேபணியில் முழு நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் இறங்கினார்.
தன்னுடைய குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தினமும் தன் பணியில் ஈடுபடுகிறார்.
கடுமையான நோய்களிலிருந்து மக்கள் முடிந்தளவு தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் காயத்திரி, தமது நிதி ஆலோசனைச் சேவைகளை நாடி வருவோருடன் நம்பிக்கைஅடிப்படையிலான நட்புறவைக் கொண்டுள்ளார்.
"நிதி தொடர்பான திட்டமிடுதலில் இளையர்கள் ஈடுபடத் தயங்குவதில்லை. ஆனால், நிதித் திட்டமிடுதலின் முக்கியத்துவம் குறித்துப் பேச, நம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த மூத்தோர் பலர் விரும்புவதில்லை. நிதி ஆலோசகர்கள் செய்வது ஏமாற்று வேலையல்ல என்பதை அவர்கள் உணர்ந்தால் நிதி நிர்வாகம் தொடர்பான முடிவுகளை அவர்கள் எடுப்பதற்கு நாங்கள் எளிதில் உதவ முடியும்," என்றார் காயத்திரி.