உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பகுதியில் சென்ற பிப்ரவரி 2ஆம் தேதி தனது தோழியுடன் உணவருந்தச் சென்ற விநோத் ராஜேந்திரனுக்கு (படம்) அது ஒரு சாகச நாளாக அமைந்தது.
பின்னிரவில் அவரும் அவரது தோழி ரமிஸா பானு அப்துல் ரகுமானும் உதவி கேட்டு அலறிய பெண்ணின் குரலைக் கேட்டதும் விரைந்து செயல்பட்டனர்.
மாது ஒருவரைப் பாலியல் கொடுமை செய்த ஆடவர் இவர்களைக் கண்டதும் தப்பியோடினார்.
விடாமல் துரத்திச் சென்ற விநோத் ஆடவரை மடக்கிப் பிடித்த வேளையில் திருவாட்டி பானு காவல்துறையினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் பாலியல் கொடுமை செய்த ஆடவரைக் கைது செய்தனர்.
தாங்கள் வராவிட்டால் நிலைமை விபரீதமாகி இருக்கும் என்று அழுதபடி அந்த மாது கூறியதை விநோத் நினைவுகூர்ந்தார்.
பொது உணர்வுக்கான விருதுகளுக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட ஆறு பேரில் திரு விநோத்தும் திருவாட்டி பானுவும் அடங்குவர்.
பொதுப் பாதுகாப்புக்குப் பங்களித்தமைக்காக சிங்கப்பூர்க் காவல்துறை இந்த விருதை வழங்கிக் கௌரவித்தது. கடையில் திருடிய ஆடவரைப் பிடித்துக் கொடுத்த ஒருவருக்கும், குற்றச்செயல்களைத் தடுப்பதில் துணைபுரிந்த மூன்று அமைப்புகளுக்கும் நேற்றைய விருது நிகழ்ச்சியில் காவல்துறை விருதுகளை வழங்கியது.

