ஆசிய கலாசார அரும்பொருளகம் வெளியிட்டுள்ள கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 100 பொருள்களின் படங்களைக் கொண்டுள்ள நூலில் காணப்படும் பொருள்கள் பல்வேறு கலாசாரங்களின் தாக்கத்தையும் வலிமையையும் சித்திரிப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.
உலகில் பிரிவினைகள் அதிகரிக்கும் காலகட்டத்தில் இத்தகைய படங்கள் கூடுதல் மதிப்பைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தலைசிறந்த கலைப்படைப்புகள் பிரம்மாண்டமானவை என்றாலும் அழகால் மட்டுமே இவை மதிக்கப்படுவதில்லை. தொடர்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் வலிமையை உணர்த்த உதவுவதால்தான் இவை முக்கியத்துவம் பெறுகின்றன என்றார் திரு ஹெங்.
நூலில் இடம்பெறும் சில கலைப்படைப்புகளை அவர் எடுத்துரைத்தார்.
18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் செய்யப்பட்ட குதிரை வடிவிலான ஊதுவத்தி ஏற்றிவைக்கும் சிறிய மாடம் அதில் ஒன்று.
உலகின் பல பாகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட கலைப்படைப்பு இது.
சீனப் பீங்கான், ஜப்பானிய அரக்கு, ஐரோப்பிய வெண்கலம், செம்பவளப் பாறை போன்றவற்றைக் கொண்டு அந்த ஊதுவத்தி மாடம் செய்யப்பட்டதைத் துணைப் பிரதமர் சுட்டினார்.
இந்தக் கலைப்படைப்புகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை சரியான நேரத்தில் நினைவூட்டும் பொருத்தமான அம்சங்கள் என்றார் அவர்.
வெவ்வேறு கலாசாரங்களின் பாரம்பரியங்கள், மரபுடைமை ஆகியவை குறித்த ஆழமான புரிதலுக்கு இது உதவுவதாகவும் அவர் கூறினார்.
தேசிய நூலகத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் புத்தகக் கண்காட்சி 2022ல் ஆசிய கலாசார அரும்பொருளகத்தின் 100 தலைசிறந்த கலைப்படைப்புகள் எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு ஹெங் உரையாற்றினார்.
'எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின்' சீன ஊடகக் குழு ஏற்பாடு செய்துள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி இம்மாதம் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும்.
சிங்கப்பூர் பல இன, பல கலாசார, பல சமய சமுதாயமாக விளங்குவதால் வேற்றுமையும் வெளிப்படைத்தன்மையும் இதன் முக்கிய விழுமியங்களாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் சிங்கப்பூரர்கள் அரும்பொருளகங்களுக்குச் சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூரின் மரபுடைமை, வரலாறு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் சிங்கப்பூரர்களுக்கு இடையிலான பொதுவான அம்சங்களை இந்த வட்டாரம், அதற்கப்பால் உலகம் முழுவதும் விரிவுபடுத்தவும் இது உதவும் என்றார் அவர்.
சீன மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் ஐந்து பாகங்களைக் கொண்டது. இவை சமயம், அன்பு, அழகு, தூய்மை, நம்பிக்கை ஆகிய கருப்பொருள்களில் அமைந்துள்ளன.
ஆர்வமுள்ளவர்கள், புத்தகக் கண்காட்சி அல்லது 'யூனியன் புக்' இணையத்தளத்தில் 38 வெள்ளிக்கு இந்த நூலை வாங்கிக்கொள்ளலாம்.