செயற்கை கோழி இறைச்சியைத் தயாரிக்கும் ஆசியாவின் ஆகப் பெரிய தொழிற்சாலை பிடோக் வட்டாரத்தில் அடுத்தாண்டு கட்டி முடிக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஈட் ஜஸ்ட் நிறுவனத்தின் பிரிவான குட் மீட், 30,000 சதுர அடி பரப்பளவில் ஆலையைக் கட்டவுள்ளது. இது ஒரு காற்பந்து திடலில் பாதியாகும்.
இந்நிறுவனம் விலங்குகளின் உயிரணுக்களைக் கொண்டு தயாரித்த கோழி இறைச்சியை இங்கு விற்க சிங்கப்பூர் உணவு அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது.
உயிரணுக்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் செயற்கை இறைச்சியை விற்க அனுமதி வழங்கிய முதல் நாடு சிங்கப்பூர் ஆகும்.
உயிரணுக்களைப் பிரித்து எடுத்து அதை உயிரியல் உலையில் வளர்த்து செயற்கைக் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கோழியைக் கொல்வதற்குத் தேவை இல்லை.
$61 மில்லியன் செலவில் கட்டப்படும் குட் மீட்டின் தொழிற்சாலை அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும்.
நிறுவனத்தின் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக இது இருக்கும்.
அதில் 6,000 லிட்டர் கொள்அளவு கொண்ட உயிரியல் உலை அமைக்கப்படும்.
செயற்கை இறைச்சித் தொழில்துறையில் அமைக்கப்படும் ஆகப் பெரிய உயிரியல் உலை இது.
ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரம் கிலோ செயற்கை கோழி இறைச்சியை அது தயாரிக்கும். தொழிற்சாலையில் 50 ஆய்வாளர்கள் பணியாற்றுவார்கள்.