நிக்கல் நெடுஞ்சாலையில் கடந்த 4ஆம் தேதியன்று நடந்த விபத்தில் சிக்கிய மூன்று மிதிவண்டி ஓட்டிகள், டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து, அவர்களில் இருவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் எஞ்சியவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நடந்தபோது 14 பேர் தங்களின் மிதிவண்டிகளில் கும்பலாகச் சாலையில் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னிரவு 2 மணியளவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த விபத்து தொடர்பில் 39 வயது வாகன ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கில்லிமார்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் சாலைப் பகுதியில் விபத்து நடந்ததாகவும் அப்போது வாகனம் ஓட்டிச் சென்ற அந்த ஆடவர், குடிபோதையில் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
விபத்தில் சிக்கிய மூன்று மிதிவண்டி ஓட்டிகளில் ஒருவர் பெண். அவருக்கு 47 வயது என்று அறியப்படுகிறது. மற்ற இரு ஆண்களும் 47, 48 வயதுஉடைவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
மருத்துவ அதிகாரிகள் வந்த சமயத்தில் மூவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.
விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் கீழே படுத்திருந்ததாகவும் மற்ற இருவர் நொண்டிக்கொண்டு இருந்ததாகவும் மிதிவண்டிக் கும்பலைச் சேர்ந்த திரு ரோனி ஃபைசால் டான், 54, குறிப்பிட்டார். தமக்குப் பின்னால்தான் அந்த மூவரும் மிதிவண்டி ஓட்டி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.