பொருளியலை மேம்படுத்த உதவும்படி சிங்கப்பூரிடம் இலங்கை கோரிக்கை

பொருளியலை மேம்படுத்த உதவும்படி சிங்கப்பூரிடம் இலங்கை கோரிக்கை

2 mins read
2798af6c-a097-44f7-b7b7-dbafc441bdf0
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பேய்ரிஸ். படம்: ஃபேஸ்புக்/விவியன் பாலகிருஷ்ணன் -

இலங்கை, தனது பொருளியல் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, முதலீடுகள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் சிங்கப்பூரின் உதவியை கோரியுள்ளது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பேய்ரிஸ் இந்த உதவியைக் கோரியுள்ளார்.

இலங்கை பொருளியல் நெருக்கடி பற்றி விளக்கமளித்த திரு பேய்ரிஸ், அதைச் சமாளிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் தற்காலிக நிதி உதவியைக் கோரினார் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன.

இலங்கையில் நேரடி முதலீடுகளையும், அந்நாட்டின் ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அதிகரிக்க வேண்டும். அத்துடன் இலங்கை நாட்டவர்க்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் திரு பேய்ரிஸ் கோரினார் என்று கூறப்பட்டது.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், திரு பேய்ரிஸ் சிங்கப்பூர் வந்திருக்கிறார். ஷங்ரிலா கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஒருவர் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன என்று கூறப்பட்டது.

நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம், போக்குவரவு அமைச்சரும் வர்த்தக உறவுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன் ஆகியோரையும் திரு பேய்ரிஸ் தமது வருகையின்போது சந்தித்தார் என்று இலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டன.

இந்தச் சந்திப்புகளில், கொவிட்-19 பரவலின்போது இலங்கைக்குத் தேவையான மருத்துவப் பொருள்களையும் சாதனங்களையும் வழங்கியதற்காக சிங்கப்பூருக்கு திரு பேய்ரிஸ் நன்றி கூறினார்.

அத்துடன் தொற்றுப்பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் தெமாசெக் அறநிறுவனம் விநியோகித்த முகக்கவசங்களை இலங்கையில் உற்பத்தி செய்ததற்காகவும் அவர் நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் இலங்கைக்காக ஏற்பாடு செய்த மனிதாபிமான உதவியையும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் அரசாங்கம் அதற்கு 100,00 வெள்ளி நன்கொடை வழங்கி இருந்தது.

உதவிப் பொருள்களின் முதல் தொகுதி இலங்கை சென்று சேர்ந்துள்ளது.