உலகளாவிய பயணங்கள் மீண்டும் தொடங்கிவரும் வேளையில், பயணிகள் பலர் தங்கள் பயணச்சீட்டுகளைப் பல மாதங்களுக்கு முன்னதாகவே வாங்கி வருகின்றனர்.
பயணம் செய்வதற்கு இரண்டிலிருந்து எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலர் வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்துவிடுவதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பயண முகமைகள், பயண முன்பதிவு இணையத்தளங்கள், விமான நிறுவனங்கள் ஆகியவை இந்தத் தகவலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
டிசம்பர் மாதத்தில் வெளிநாடு செல்வதற்காக சிலர் ஏப்ரலிலேயே முன்பதிவு செய்துவிட்டதாக சான் பிரதர்ஸ், ஈயூ ஹாலிடேஸ் போன்ற சுற்றுப்பயண முகமைகள் தெரிவித்தன.
சிங்கப்பூர் பயணிகள் சராசரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக விமானப் பயணச் சீட்டுகளை வாங்கி வருவதாகவும் பயணச்சீட்டுகளுக்கு வலுவான தேவை இருப்பதாகவும் ஏர்ஏசியா சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லோகன் வேலாயுதம் கூறினார்.
ஏர்ஏசியா விமான நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் சிங்கப்பூர் பயணச் சேவைகளைத் தொடங்கியது.
பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை திரும்ப ஏற்பட்டுள்ளதாலும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதாலும் பலர் தங்களது வெளிநாட்டு விடுமுறைப் பயணங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்து வருவதாக பயணத் துறை வல்லுநர்கள் கூறினர்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு நான்கிலிருந்து ஆறு மாதங்கள் முன்னதாக முன்பதிவு செய்யும் போக்கு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தொடரும் என்று தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரியில் விருந்தோம்பல், சுற்றுப்பயண நிர்வாகத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றும் பெஞ்சமின் காசிம் கூறினார்.

