சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான வழிகாட்டிக் குறிப்புகள் புதிய அம்சங்
களுடன் மாற்றம் கண்டுள்ளது. உடலுழைப்பு இல்லாத சோம்பேறித்தனத்தைக் குறைத்து பல்வேறு நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டிக் குறிப்புகளை ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் நேற்று தொடங்கி வைத்தன.
மருத்துவ, சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வழிகாட்டிக் குறிப்புகள் உடலுறுதி, தசை வலிமை, எலும்பு வலிமை, உடல்நெகிழ்வு ஆகியவற்றை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கிறது. அந்த நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டால், உடல் வலிமைக்காக 'ஜிம்' எனப்படும் உடற்பயிற்சிக் கூடத்திற்கோ பூங்காவுக்கோ செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் அன்றாட வாழ்நாள் பழக்கங்களோடு இணைந்திருக்கும். உதாரணமாக, உணவை யாராவது கொண்டு வந்து தருவதற்காகக் காத்திருப்பதைக் காட்டிலும் நடந்துசென்று நாமே அதனை எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு முன்னர், 2011ஆம் ஆண்டு முதல் வழிகாட்டிக் குறிப்புகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள குறிப்புகள், உலக சுகாதார நிறுவனம் 2020ஆம் ஆண்டு பரிந்துரைத்த அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.
வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற நடவடிக்கைகள் இந்தக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கர்ப்பிணி மாதர், குழந்தையை ஈன்றெடுத்த மாதர் ஆகியோருக்கும் உடற்குறை உள்ளோருக்கும் அவரவர்க்கு ஏற்ற வகையில் தனித்தனி நட
வடிக்கைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.