அமெரிக்கா, இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா, கத்தார் ஆகிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களை பிரதமர் லீ சியன் லூங் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு நேற்றும் சனிக்கிழமையும் இஸ்தானாவில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் நேற்று வரை நடைபெற்ற ஷங்ரிலா கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வேளையில், இந்த நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் திரு லீயைச் சந்தித்தனர்.
அமெரிக்க தற்காப்பு அமைச் சர் லாயிட் ஆஸ்டினுடன், உலக வளர்ச்சி மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் லீ விவாதித்தார்.
மேலும், சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு தற்காப்பு உறவுகளை இருவரும் மறுஉறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது.
பயங்கரவாத முறியடிப்பு மற்றும் உயிர்மருத்துவம் ஆகிய புதிய அம்சங்களில் இரு நாடுகளின் உறவு விரிவடைந்திருப்பதை திரு ஆஸ்டின் உறுதிசெய்ததாகவும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்தோனீசியாவின் தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியான்டோவுடனான சந்திப்பின்போது சிங்கப்பூர், இந்தோனீசியா இடையிலான மக்களோடு மக்கள் உறவு மறுஉறுதிப்படுத்தப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு, கடல்துறை மற்றும் பயங்கரவாத முறியடிப்பு குறித்தும் திரு லீயும் திரு பிரோபோவும் விவாதித்தனர்.
மலேசியா தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசேனும் திரு லீயும் சந்தித்தபோது, கடல்துறை பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, பயங்கரவாத முறியடிப்பு போன்றவை தொடர்பாக இந்த வட்டாரத்தில் பொதுவாகக் காணப்படும் சவால்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
அந்த அமைச்சர்களுடனான சந்திப்புகள் குறித்து பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"கடந்த சில தினங்களாக பல்வேறு தற்காப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தலைவர்களைச் சந்தித்தேன். அந்தந்த நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் வலுவான உறவுகளை மறுஉறுதிப்படுத்தவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் இந்தச் சந்திப்புகள் நல்வாய்ப்பாக அமைந்தன," என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

