பூன் லே சமூக நிலையத்தில் நேற்று அக்கம்பக்க குடியிருப்பு வட்டாரங்களைச் சேர்ந்த 75 குழந்தைகளும் 50 இளம் தொண்டூழியர்களும் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
'கம்யூனிட்டி யூத்கேர் ஃபெஸ்டிவல்' எனப்படும் இளையர் கேளிக்கை விழாவில் கலந்துகொண்ட அவர்கள், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வாசனைத் திரவியம் தயாரித்தல், கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுதல், காற்பந்து விளையாடுதல் போன்றவை அந்த நடவடிக்கைகள்.
மக்கள் கழகத்தின் இளையர் இயக்கம் ஏற்பாடு செய்த இந்த கேளிக்கை விழா கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்தது. நேற்றைய இறுதிநாளில் அதிபர் ஹலிமா யாகோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தேசிய வளர்ச்சி அமைச்சரும் பூன் லே அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான டெஸ்மண்ட் லீயும் நிகழ்வில் பங்கேற்றார். பதின்ம வயதினருக்கான மனநலப் பயிலரங்கிலும் இவர்கள் கலந்துகொண்டனர்.
அதிபர் சவால் நிதிக்காக மக்கள் கழகம் சார்பில் $250,000க்கான காசோலை அதிபர் ஹலிமாவிடம் வழங்கப்பட்டது. குறைந்த வருமானக் குடும்பங்களை ஆதரிக்கும் நோக்கம் கொண்டது அதிபர் சவால் நிதி.
அதேபோல, மக்கள் கழகத்தின் இளையர் இயக்கம், குறைந்த வருமானக் குடும்பங்களுக்காக கல்வித் திட்டங்களையும் மனநலத் திட்டங்களையும் வாரந்தோறும் நடத்துகிறது.
2018ஆம் ஆண்டு முதல் பூன் லே வட்டாரத்தைச் சேர்ந்த 96 குடும்பங்களின் 180க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தத் திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக 5 வயது முதல் 18 வயது வரையிலான பிள்ளை
களுக்கு நடத்தப்படும் கல்வித் திட்டங்கள் தமது குடும்பத்திற்கு உதவியதாக திருவாட்டி மர்னி, 40, என்னும் இல்லத்தரசி கூறினார். கொள்ளை நோய் காலத்தில் மெய்நிகர் வாயிலாகவும் இந்தக் கல்வித் திட்டங்கள் தொடர்ந்ததை அவர் சுட்டினார்.
பூன் லே வட்டாரத்தில் ஈரறை வாடகை வீட்டில் வசிக்கிறார் இவர்.

