கொள்ளைநோய் பரவல் காரணமாக தங்குவிடுதியிலிருந்து வெளியேற வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பொது இடங்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் உள்ள ஊழியர்கள் அதற்கான அனுமதி அட்டை பெறவேண்டும். வெளியே சென்றால் இவ்வளவு நேரத்திற்குள் திரும்பவேண்டும் என்பதுபோன்ற நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
அண்மைக் காலமாக கட்டுப்பாடு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதன் ஒருபகுதியாக, ஜூன் 24 முதல் வெளிநாட்டு ஊழியர்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. தளர்த்தப்பட்ட பின்னர், பொது இடங்களுக்குச் செல்ல அவர்கள் அனுமதி பெறத் தேவையில்லை. கட்டுப்பாடு தளர்வு அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) சுகாதார அமைச்சு வெளியிட்டது.
இருப்பினும், அதிக மக்கள் நடமாட்டமுள்ள லிட்டில் இந்தியா, சைனாடவுன், கேலாங் சிராய் மற்றும் ஜூரோங் ஈஸ்ட் ஆகிய பகுதி களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை தினங்களிலும் செல்ல அனுமதி அட்டைக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேநேரம், வார நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் அவர்கள் இந்தப் பகுதிகளுக்கு அனுமதி பெறாமல் செல்லலாம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொது விடுமுறை தினங்களிலும் 80,000 அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என்று அமைச்சு கூறியது. அந்த வகையில், லிட்டில் இந்தியா செல்ல 30,000, ஜூரோங் ஈஸ்ட்டுக்கு 20,000, சைனாடவுன், கேலாங் சிராய் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தலா 15,000 அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
கொவிட்-19 கிருமி பரவத் தொடங்கியபோது 2020 ஏப்ரல் மாதம் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் 31 பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்த இரு மாதங்களில் அந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 33,000க்குச் சென்றது. கடந்த ஆண்டு இறுதிவரை கிட்டத்தட்ட 175,000 ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கட்டுப்பாடு தளர்த்தப்படும் ஜூன் 24ஆம் தேதிக்காகத் தங்களில் பலரும் ஆவலுடன் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறினர்.
"செந்தோசாவையும் இதர தீவு
களையும் சுற்றிப்பார்க்க ஏற்கெனவே திட்டமிட்டுள்ளோம்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார் பங்களாதேஷைச் சேர்ந்த மொஃ பாஸல் ஹொசைன், 36.

