ஜுரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32ல் உள்ள புளோக் 310ல் ஒரு அடுக்குமாடி வீட்டில் இன்று காலை தீப் பிடித்தது. தீ மூண்டபோது வீட்டிலிருந்த ஒரு குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாவது மாடியில் இருக்கும் வீட்டின் சமையலறையில் தீ மூண்டது. வீட்டில் இருந்த இருவர், ஒரு குழந்தை ஆகியோர் தீ மூண்டவுடனே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.
சம்பவயிடத்துக்குத் தீயணைப்பாளர்கள் அடைந்தபோது, வீட்டில் இரண்டு பூனைகள் இருந்தன. அவற்றை காப்பாற்றியதோடு, அக்கம்பக்கத்தார் 15 பேர் தங்கள் விடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவயிடத்தை அடையும் முன்பே, தீயை அணைக்க பொதுமக்களில் ஒருவர் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.