பொருள், சேவை வரியை ஏழு விழுக்காட்டில் இருந்து ஒன்பது விழுக்காட்டுக்கு இரண்டு கட்டங்களாக உயர்த்துவது உள்ளிட்ட பொருள், சேவை வரிச் சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் மாற்றங்கள் குறித்துக் கருத்து உரைக்கும்படி பொதுமக்களை நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட ஐந்து மாற்றங்களில் இரண்டு இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டவை.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பொருள், சேவை வரியை ஏழு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காட்டுக்கு உயர்த்துவதும் பின்னர் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஒன்பது விழுக்காட்டுக்கு உயர்த்துவதும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் முதலாவது.
இதற்கு முன்னர் 2007ஆம் ஆண்டு பொருள், சேவை வரி ஐந்து விழுக்காட்டிலிருந்து ஏழு விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டது.
இனி அது ஒன்பது விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்ட பிறகு 2024ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய 3.5 பில்லியன் வெள்ளி வருவாய் கிட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருவாய், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கும் மூத்த குடிமக்களின் பராமரிப்புச் செலவு உள்ளிட்ட சமூகச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும்.
பரிந்துரைக்கப்படும் இரண்டாவது மாற்றம் பயண ஏற்பாட்டுச் சேவை தொடர்பானது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து இத்தகைய சேவை வழங்கும் நிறுவனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதன் அடிப்படையில் வரி விகிதம் அமையவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் தொடர்ந்து நியாயமான வகையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய இயலும்.
இது சாத்தியமானால் சிங்கப்பூருக்கு வெளியில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை வழங்கும் நிறுவனங்கள் பொருள், சேவை வரி செலுத்தத் தேவை இராது. தங்குமிட ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
பரிந்துரைக்கப்பட்ட இதர மூன்று மாற்றங்களும் சிங்கப்பூரின் பொருள், சேவை வரி நடைமுறையைச் சரியான இடைவெளியில் மறுஆய்வு செய்வது தொடர்பானவை என்று நிதியமைச்சு கூறியது.
இதுகுறித்துப் பொதுமக்கள் நேற்று முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை மின்னஞ்சல் மூலம் கருத்துரைக்கலாம். நிதியமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தைப் பயன்படுத்தி அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம்.

