ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 310ன் ஐந்தாம் மாடி வீட்டில் நேற்று தீ மூண்டது.
சம்பவத்தையடுத்து பச்சிளங்குழந்தை ஒன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் தீயை அணைத்ததுடன் அந்த வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை மீட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நெருக்கடி நேர மருத்துவத் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற குடிமைத் தற்காப்புப் படையினர் அந்தப் பூனைகளுக்கு உயிர்வாயு கொடுத்ததாகக் கூறப்பட்டது.
சமையலறையில் மூண்ட தீ குறித்து நேற்றுக் காலை 7.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக அது 'ஃபேஸ்புக்கில்' பதிவிட்டுள்ளது.
தீ மூண்ட வீட்டில் வசித்த இருவரும் பச்சிளங்குழந்தையுடன் தீயணைப்பாளர்கள் செல்லும் முன்னரே அங்கிருந்து வெளியேறினர். அருகில் இருக்கும் வீடுகளில் இருந்து ஏறக்குறைய 15 பேரைக் காவல்துறை வெளியேற்றியதாகக் கூறப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.