தாதிமை இல்லங்களில் உள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பெரிய அளவில் கொவிட்-19 பாதிப்பு ஏற்படாவண்ணம், சிங்கப்பூர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியிருக்கிறார்.
தடுப்பூசி செலுத்துதல், சிறப்பான தொற்றுக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது என்றார் அவர்.
தாதிமை இல்லங்களில் தங்கியிருப்போரில் தடுப்பூசிக்குத் தகுதிபெற்ற 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்குச் சுகாதார அமைச்சு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை அவர் சுட்டினார்.
மூத்தோர் பராமரிப்பு நிலையச் சேவையை நாடுவோருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான வீட்டுப் பராமரிப்புச் சேவையை நாடுவோருக்கும் இதன்கீழ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இருப்பினும் அடுத்த கிருமித்தொற்று அலைக்கும் கொவிட்-19 கிருமியின் புதிய திரிபுகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அல்லது புதிய கிருமிப்பரவல் ஏதும் ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கும் சிங்கப்பூரின் தாதிமை இல்லங்கள் தயார்நிலையில் இருக்கவேண்டும் என்றார் அமைச்சர் ஓங்.
ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு அமைப்பின் வருடாந்தர சமூகப் பராமரிப்புப் பணித்திட்டக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சி நேற்று பேன் பசிபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்றது. நேரடியாகவும் காணொளி மூலமும் பலர் இதில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் அடுத்த மாதமோ ஆகஸ்ட் மாதமோ மேலும் ஒரு கிருமிப்பரவல் ஏற்படக்கூடும். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் அல்லது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க நேரிடுவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
"எனவே சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் ஒவ்வோர் அங்கமும் இதனைச் சமாளிக்கத் தயாராக இருக்கவேண்டும்; தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் எளிதில் பாதிக்கப்படக்கூடும்," என்றார் அவர்.