ஈராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது சிலேத்தார் விமான நிலையம்.
இதனைக் குறிக்கும் விதமாக மலிவுக் கட்டண விமானச் சேவை வழங்கும் மலேசியாவின் 'ஃபயர்ஃபிளை' நிறுவனத்துக்குச் சொந்தமான 'எஃப்ஒய்3124' விமானம் நேற்றுக் காலை 8.50 மணியளவில் சிலேத்தார் விமான நிலையத்தை வந்தடைந்தது.
59 பயணிகளுடன் சுபாங் நகரிலிருந்து இந்த விமானம் வந்துசேர்ந்தது. முதற்கட்டமாக சிங்கப்பூருக்கும் சுபாங்கிற்கும் இடையில் தினசரி நான்கு விமானச் சேவைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிலேத்தார் விமான நிலையத்தில் இருந்து சுபாங்கின் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் நோக்கிச் செல்லும் இரு விமானங்களும் அங்கிருந்து இங்கு இரண்டு விமானங்களும் அன்றாடம் சேவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் விமானச் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னர் நாள்தோறும் இருவழிகளிலும் மொத்தம் 12 விமானச் சேவைகள் வழங்கப்பட்டன.
பயணிகளின் தேவைக்கேற்ப இந்த ஆண்டு இறுதிக்குள் விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று 'ஃபயர்ஃபிளை' நிறுவனத் தலைமை நிர்வாகி ஃபிலிப் சீ செய்தியாளர்களிடம் கூறினார்.
இரண்டு விமான நிலையங்களும் அளவில் சிறியவை என்பதால் சுபாங்கில் இருந்து 'ஃபயர்ஃபிளை' விமானம் மூலம் மூன்று மணி நேரத்திற்குள் சிங்கப்பூர் வந்தடையலாம் என்றார் அவர்.
நேற்றைய முதல் விமானத்தில் வந்துசேர்ந்த பயணிகள் பலரும் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பே இந்த விமானச் சேவையைப் பயன்படுத்தியதாகக் கூறினர்.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விமானச் சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இவர்கள் கூறினர்.
வருங்காலத்தில் பினாங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சேவை வழங்கத் திட்டமிருப்பதாகக் கூறப்பட்டது.

