கடந்த ஆண்டு பிப்ரவரியில் காரை ஓட்டியபோது தாம் செல்லும் வழியாக வாகனங்கள் வருகின்றனவா என்பதைக் கவனிக்கத் தவறினார் எஸ்பிஎஸ் டிரான்சிட் டௌன்டவுன் பாதையின் தலைமை நிர்வாகி அலெக்ஸ் கோய் பெங் குவான், 63 (படம்). இதனால், அப்பகுதியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்றின் மீது இவரது கார் மோதியது.
அந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிய திரு ஹாஷிம் ஹுசேன், 75, என்பவருக்கும் அவர் பின்னால் அமர்ந்திருந்த திருமதி சுப்பாரியா சலாமாட், 69, என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக, திருமதி சுப்பாரியாவுக்கு உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விபத்துக்குக் காரணமான அலெக்சுக்கு நேற்று $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலையைப் பயன்படுத்திய மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் வாகனத்தை ஓட்டி கடுமையான காயம் விளைவித்த குற்றத்தை இவர் ஒப்புக்கொண்டார்.
அலெக்ஸ், 1985ல் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் சேர்ந்ததாக அதன் இணையப் பக்கம் குறிப்பிடுகிறது. ரயில் செயல்பாடு, ஆதரவுப் பிரிவுத் தலைவராக இவர் உள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி, கிராஞ்சி விரைவுச்சாலையின் துணைச்சாலையை நோக்கி, உட்லண்ட்ஸ் சாலை வழியாக அலெக்ஸ் காரை ஓட்டியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
வலது பக்கத்தில் வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் இவரது கார் மோதியது. அலெக்ஸ் காரில் இருந்த கண்காணிப்புக் கருவியில் இந்த விபத்தைக் காட்டும் காட்சி பதிவானது.

