தாதிமை இல்லத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் ஏடிஎம் அட்டையைத் திருடி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து $1,000 எடுத்த தாதிமை இல்ல ஊழியர் ஒருவருக்கு நேற்று $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருட்டு, மோசடிக் குற்றச்சாட்டுகளை அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார். அவருக்குத் தண்டனை விதிப்பின்போது மற்ற இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
'உட்லண்ட்ஸ் கேர் ஹோம்' இல்லத்தில் சுகாதார உதவியாளராகப் பணிபுரிந்த லதா நாராயணனுக்கு, 2019ல் அந்த 65 வயது ஆடவரைப் பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அந்த முதியவர் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ல், தமது ஏடிஎம் அட்டையின் 'பின்' எண்ணை அந்த ஆடவர் மறந்தார். புதிய எண்ணைப் பெற, லதா அந்த ஆடவரை வங்கிக்கு அழைத்துச் சென்றார்.
லதா முன்னிலையில் அந்த ஆடவர் புதிய 'பின்' எண்ணைப் பெற்றுக்கொண்டார். தமது கைப்பேசி உறையில் உள்ள பாக்கெட்டில் ஏடிஎம் அட்டையை வைத்து, கைப்பேசியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு சொல்லி அந்த ஆடவர் லதாவிடம் அதை ஒப்படைத்தார்.
2019 நவம்பர் 21ஆம் தேதி, அந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, அந்த ஆடவரின் வங்கிக் கணக்கிலிருந்து லதா $1,000 எடுத்தார்.
நவம்பர் 25ஆம் தேதி அந்த அட்டையைப் பயன்படுத்தி $73 பெறுமானமுள்ள உணவு, குளியல் அறை பொருள்களை உட்லண்ட்சில் உள்ள பேரங்காடி ஒன்றில் லதா வாங்கினார்.
நவம்பர் 27ஆம் தேதி அந்த முதியவர் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து லதாவின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. தமது ஏடிஎம் அட்டையைத் தாம் தொலைத்துவிட்டதாகவும் தமது வங்கிக் கணக்கிலிருந்து தமக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டதாகவும் காவல்துறையிடம் அந்த ஆடவர் கூறினார்.

