சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், தன்னிடம் இருந்து வருவதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் மோசடி அழைப்புகள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மோசடி தொடர்பில், கடந்த ஏழு நாள்களில் ஆணையம் விடுத்துள்ள மூன்றாவது ஆலோசனை இதுவாகும்.
வாட்ஸ்அப்பில் வெளிநாட்டு எண்களில் வரும் இத்தகைய அழைப்புகள், '+' குறியைக் கொண்டிருக்கும். உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் அதிகாரபூர்வச் சின்னமும் இந்த அழைப்புகளில் தோன்றும்.
வாட்ஸ்அப், டெலிகிராம், வைபர் போன்ற குறுஞ்செய்தித் தளங்கள் மூலம் பொதுமக்களை ஆணையம் அழைக்காது என அது கூறியது.
"இத்தகைய அழைப்புகளைப் புறக்கணிக்குமாறும் தங்கள் தனிப்பட்ட அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றிவிடுவதையும் தவிர்க்கவும்," என்று ஆணையம் கூறியது.
இத்தகைய எண்களிலிருந்து அழைப்பவர்களைப் பொதுமக்கள் முடக்க வேண்டும்.

