அடுத்த கொள்ளைநோய்க்கு உலகம் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகத் திட்டங்களுக்கு ஆதரவாக புதிய இடையீட்டு நிதியை 'ஜி-20' நாடுகள் தொடங்கவுள்ளதாக இந்தோனீசிய நிதி அமைச்சர் டாக்டர் ஸ்ரீ முல்யாணி இந்திராவாத்தி கூறியுள்ளார்.
கொள்ளைநோயைத் தடுப்பதற்கான தயார்நிலையும் கொள்ளைநோய்க்கு எதிரான செயல்பாடும் கொண்ட திட்டத்தை நாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கு இடையே புதிய நிதியும் அதில் அங்கம் வகிக்கும் என்று கூறப்பட்டது. சிங்கப்பூரில் நடந்து வரும் இந்தோனீசியா-சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட்-19, உலகம் சந்திக்கக்கூடிய இறுதி சுகாதார நெருக்கடி அல்ல என்று ஆய்வுகள் குறிப்பிடுவதாக டாக்டர் ஸ்ரீ முல்யாணி குறிப்பிட்டார். அதனால் அடுத்த நெருக்கடியைச் சந்திப்பதற்கு நாடுகள் ஒன்றுதிரண்டு வர வேண்டும் என்றார் அவர்.
பெருமளவில் தொழில்மயமாக்கப்பட்ட, வளர்ச்சி கண்டு வரும் 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து 'ஜி-20' என்று அழைக்கப்படுகின்றன. இந்தோனீசியாவின் பாலித் தீவில் வரும் நவம்பரில் 'ஜி-20' மாநாடு நடைபெற உள்ளது.
அனைத்துலக சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை வலுவாக்குதல், மின்னிலக்க உருமாற்றம், எரிசக்தி நிலைமாற்றம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் 'ஜி-20' இவ்வாண்டு கவனம் செலுத்தும்.

