தொழில்நுட்ப நிறுவனங்கள் வெற்றி கரமாகச் செயல்பட்டு செழித்தோங்க தேவையான புத்தாக்கம், ஆக்கபூர்வமான ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை சிங்கப்பூர் வழங்குகிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
லண்டன் தொழில்நுட்ப வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திரு ஹெங் நேற்று கலந்துகொண்டு பேசினார். பருவநிலை மாற்றம், மூப்படையும் மக்கள்தொகை, கிருமித்தொற்றால் ஏற்படும் நெருக்கடிநிலைகள் போன்ற சவால்களை மக்கள் எதிர்கொள்வதாகவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வாய்ப்பு தொழில்நுட்பத்துக்கு இருப்பதாகவும் திரு ஹெங் கோடிட்டுக்
காட்டினார்.
சவால்களுக்குத் தீர்வு காண புத்தாக்கம் மிகவும் முக்கியம் என்றார் அவர். அதன்படி டெக்.பாஸ் போன்ற திட்டங்களின்கீழ் வெளிநாட்டுத் திறனாளர்களை சிங்கப்பூர் வரவேற்பதாக அவர் கூறினார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்தரத் தொழில்நுட்பத் தொழில்முனைவர்களுக்கும் தலைவர்களுக்கும் இந்த டெக்.பாஸ் விசா வழங்கப்படுகிறது.
ஸ்டார்ட்அப் எஸ்ஜி போன்ற வழிகாட்டுதல், மானியங்கள் ஆகியவற்றை வழங்கும் திட்டங்கள் மூலம் சமூகத்தை மேம்படுத்த சிங்கப்பூர் இலக்கு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட புதிய நிறுவனங்கள் $15 பில்லியன் திரட்டியதாகத் துணைப் பிரதமர் கூறினார்.
லண்டன் உட்பட உலகெங்கும் 15க்கும் அதிகமான முக்கிய மையங்களுடன் புதிய நிறுவனங்களை இணைக்கும் சிங்கப்பூரின் உலகளாவிய புத்தாக்கக்
கூட்டணிக் கட்டமைப்பை திரு ஹெங் சுட்டினார்.
அதுமட்டுமல்லாது, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப வாரத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி களை சிங்கப்பூர் ஆண்டுதோறும் ஏற்று நடத்துவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சி இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக திரு ஹெங் தெரிவித்தார்.
புத்தாக்கம் செழித்தோங்க ஆக்கபூர்வ ஒழுங்குமுறை நடப்பில் இருப்பது மிகவும் அவசியம் என்பதை திரு ஹெங் வலியுறுத்தினார்.
கணினியின் கட்டமைப்பை மாற்றுவது, ஊடுருவதல் போன்றவற்றிலிருந்து கடினமாக அல்லது சாத்தியமில்லாத வகையில் தகவல்களைப் பாதுகாத்து பதிவு செய்யும் முறையான புளோக்செயின் தொழில்நுட்பத்தில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அவர் கூறினார்.
நிறுவனங்களின் பார்வை ஆசிய சந்தைகளில் பொதுவாக சீனா, இந்தியா, தென்கொரியா போன்ற நாடுகளை நோக்கித் திரும்புவதாகவும் அவற்றைத் தாண்டி மற்ற நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவு படுத்துவது குறித்து அவை பரி
சீலனை செய்ய வேண்டும் என்றும் திரு ஹெங் அழைப்பு விடுத்தார்.
660 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென்கிழக்காசிய நாடுகளில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்
களிடம் அவர் கூறினார்.
விரைவாக மேம்பட்டுவரும் நடுத்தர வர்க்கத்தினர், மின்னிலக்கத் திறன்கள் அதிகம் உள்ள இளைஞர்கள் ஆகியவற்றை தென்கிழக்காசிய நாடுகள் கொண்டிருப்பதை அவர் சுட்டினார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்காசிய நாடுகளின் மின்னிலக்கப் பொருளியல் இரு
மடங்கு அதிகரித்து 360 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயரும் என்று முன்னுரைக்கப்
படுவதாக திரு ஹெங் கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க விரும்புவோருக்கு சிங்கப்பூர் மிக முக்கியமான நுழைவாயிலாக அமையும் என்று நிகழ்ச்சியில் நேரடியாகவும் மெய்நிகர் மூலமாகவும் பங்கேற்ற தொழில்நுட்பத் தலைவர்களிடம் திரு ஹெங் தெரிவித்தார்.

