வெளிநாட்டு ஊழியர்களைத் தூற்றியதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் செய்தது குற்றம் எனத் தீர்ப்
பளித்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று தோ பாயோ லோரோங் 5ல் நடந்துகொண்டிருந்த கட்டுமான பணிகள் தொடர்பாக அளவு எடுக்கும் பணியில் திரு ரத்னசிங்கம் ஜதீசன், திரு கிருஷ்ணன் கார்த்திகேயன் ஈடுபட்டனர்.
அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் அருகில் இருந்த பொதுத் தாழ்வாரத்தில் இருவரும் ஒதுங்கினர்.
அப்போது சிங்கப்பூரரான 56 வயது லீ போ கியான் அவர்கள் இருவரையும் தூற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. லீ தங்களை அவமானப்படுத்துவதை திரு ரத்னசிங்கம் காணொளி எடுத்தார்.
பாதிக்கப்பட்ட இரு வெளிநாட்டு ஊழியர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
"நீங்கள் என் நாட்டுக்கு வந்தது தவறு. இந்த அரசாங்கம் சட்டவிரோதமானது. உங்களை நாங்கள் விரட்டியடிப்போம்," போன்ற சுடுசொற்களை லீ சரமாரியாக அவிழ்த்துவிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூரில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் திரு ரத்னசிங்கம், திரு கிருஷ்ணன் ஆகிய இருவரையும் பார்த்து லீ கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு கூறுவதற்கு தமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்று லீ நம்பியதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு லீயிடம் பேசியதில்லை என்று பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்தனர். லீ பயன்படுத்திய கடுமையான சொற்கள் தங்களுக்கு மனவுளைச்சலை அளித்ததாக இருவரும் கூறினர்.
மனவேதனை ஏற்பட்டது ஒருபுறம் இருக்க, அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும் நிலை ஏற்பட்டதாகவும் திரு கிருஷ்ணன் தெரிவித்ததாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
லீயின் செயல் தம்மைக் கவலை அடையச் செய்ததாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகலும் திரு ரத்னசிங்கம் கூறியதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது அதிருப்தியை ஏற்படுத்தும் உரிமை தமக்கு இருப்பதாக லீ உறுதியாக நம்பியதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார். ஆனால் அத்தகைய உரிமை இல்லவே இல்லை என்றார் அவர்.
தொல்லை விளைவித்தல், கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது ஆகிய குற்றங்களை லீ புரிந்ததாக மாவட்ட நீதிபதி சே யுவேன் ஃபாட் நேற்று தீர்ப்பளித்தார்.
திரு ரத்னசிங்கத்தையும் திரு கிருஷ்ணனையும் லீ நெருங்கியபோது அவர் முகக்கவசம் அணியவில்லை.
இம்மாதம் 21ஆம் தேதியன்று லீக்குத் தண்டனை விதிக்கப்படும்.

