குடும்பச் சேவை நிலையங்கள் சென்றாண்டு 338 முதியோர் துன்புறுத்தப்படும் சம்பவங்களை விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 2020ல் 283ஆக இருந்தது. 2019ல் 232 என பதிவுசெய்யப்பட்டது.
குடும்ப வன்முறை பற்றி பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது இந்த அதிகரிப்புக்கு காரணம் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியது. நாட்டின் மக்கள்தொகை வேகமாக மூப்படையும் நிலையில், சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அமைச்சு குறிப்பிட்டது.
பெரும்பாலும் பெண்களே துன்புறுத்தல் சம்பவங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைத் துன்புறுத்துபவர்களில் 90 விழுக்காட்டினர் அவர்களுடைய கணவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர்கள்.
உடல், மனம், உணர்வுகள், பாலியல் ஆகியவற்றின் மூலம் ஒருவர் துன்புறுத்தப்படலாம் எனக் கூறப்பட்டது.
பெரும்பாலான சமயங்களில் சமூகம் என்ன சொல்லும் என்று அஞ்சுவதால் தாங்கள் படும் அவதி பற்றி புகார் அளிக்க முதியோர் தயங்குவதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

