தங்கள் தேவைக்கேற்ற சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தை விரும்பும் மூத்தோர்
தங்களது தேவைகளுக்கு ஏற்றாற்போல் வரையப்படும் சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தைப் பெற மூத்தோர் விரும்புகின்றனர். மனநல விவகாரங்களைக் கையாளுவதில் பொது மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை இளையர்கள் விரும்புகின்றனர்.
சுகாதார அமைச்சின் 'ஆரோக்கியமான சிங்கப்பூர்' உத்தியின்கீழ் நடைபெற்று வரும் பொதுக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் கண்டறியப்பட்ட அம்சங்கள் இவை என்று சுகாதார இரண்டாம் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
தேசிய நூலகத்தில் அத்தகைய ஒரு நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு அவர் பேசினார்.
ஒருங்கிணைந்த பராமரிப்பை வழங்க இலக்கு கொண்டிருக்கும் 'ஆரோக்கியான சிங்கப்பூர்' உத்தியை வடிவமைக்க உதவும் வகையில் பொதுமக்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த உத்தியின் மற்றொரு முக்கிய அம்சமாக, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் குடும்ப மருத்துவர் ஒருவர் நியமிக்கப்படுவார். அவருக்காக அந்த மருத்துவர் சுகாதாரத் திட்டம் ஒன்றை வகுப்பார் என அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.
"குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமாக இருந்தால், அவர்களுடைய ஆரோக்கியத்தை எப்படி கட்டிக்காப்பது என்பதிலும் நாள்பட்ட நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதிலும் இத்திட்டம் கவனம் செலுத்தும்.
"நாள்பட்ட நோய்கள் உடையோர், அவை மோசமடையாமல் எப்படி சமாளிப்பது என்பதையும் இந்தத் திட்டம் உள்ளடக்கும்," என்று அமைச்சர் மசகோஸ் விவரித்தார்.
கடந்த மே மாதத்திலிருந்து ஐந்து பொதுக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நேரடியாக நடத்தப்பட்டுள்ளன. இதுவரை ஏறக்குறைய 500 பேர் இவற்றில் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளைக் கூறி உள்ளனர்.
இதுபோக, இணையத்தில் நடத்தப்படும் கருத்தாய்வு ஒன்றிலும் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கருத்தாய்வில் இதுவரை 1,800க்கும் அதிகமான கருத்துகள் பெறப்பட்டு உள்ளன.
பெறப்படும் கருத்துகள் ஆராயப்பட்டு வெள்ளை அறிக்கையில் உள்ளடக்கப்படும். பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதுகுறித்து விவாதிக்கப்படும்.

