டெங்கித் தொற்றைப் பரப்பும் பெண் ஏடிஸ் கொசுக்களை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பொறிகளில் பிடிபடும் கொசுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, எந்தெந்த வீடுகளில் கண்காணிப்புச் சோதனையை மேற்கொள்வது என்பது குறித்து தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் முடிவு செய்கின்றனர்.
எனினும், டெங்கித் தொற்று அதிகரிக்கையில், டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளிலோ டெங்கிக் குழுமங்களிலோ அதிகாரிகள் கவனம் செலுத்துவர் என்று கண்காணிப்பு அதிகாரி சிந்துஷா செல்வகுமார் கூறினார்.
வீடு ஒன்றுக்கு வந்தவுடன் சிந்துஷா தம்மை அறிமுகம் செய்துகொள்வார். குடியிருப்பாளர் அனுமதி அளித்த பிறகே அதிகாரிகள் வீட்டிற்குள் நுழையலாம். கண்காணிப்புச் சோதனையின்போது அதிகாரியுடன் குடியிருப்பாளர் இருக்க வேண்டும்.
வீட்டில் கொசு இனப்பெருக்கம் காணப்படக்கூடிய பகுதிகளை சிந்துஷா சோதிப்பார். சமையலறையில் பாத்திரங்களைக் கழுவும் இடம், பாத்திரங்களை உலரவைக்கும் இடம், கழுவு தொட்டிக்குக் கீழே உள்ள இடம், கழிவறையில் வாளிகள், வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் செடிகள் உள்ள இடம் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிகளாகும்.
வீட்டின் அமைப்பைப் பொறுத்து, மொத்த சோதனை நேரம் 15 நிமிடங்கள் வரை ஆகலாம் என்றார் சிந்துஷா.
சோதனை முடிந்தவுடன், வீட்டில் கொசுக்கள் மறைந்து இருக்கக்கூடிய இருள் நிறைந்த மூலைப் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்தை இவர் தெளிப்பார்.
கொசு இனப்பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு இவர் ஆலோசனை வழங்குவார்.
கண்காணிப்பு அதிகாரி ஒருவரின் அன்றாட பணி சற்று சிரமமான ஒன்று. பொதுவாக ஒவ்வொரு நாளும் 30 முதல் 40 வீடுகளுக்குச் சென்று சோதனை செய்ய வேண்டியிருப்பதாக சிந்துஷா சொன்னார். குடியிருப்புப் பேட்டைகளில் டெங்கிப் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து, இந்த எண்ணிக்கை சில வேளைகளில் 50 ஆகக்கூட உயரலாம்.
"குடியிருப்பாளர்கள் எங்களைப் பங்காளிகளாகப் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். அப்போதுதான் நாம் ஒன்றாகச் செயல்பட்டு டெங்கியை ஒடுக்கலாம்," என்றார் இவர்.