சிங்கப்பூர் ராணுவம், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 'எக்சர்சைஸ் டைகர் பாம் 2022' எனும் ஒருங்கிணைந்த நகர்ப்புற பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.
முராய் நகர பயிற்சி மையத்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் இன்று வரை இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறுகிறது.
1981ல் முதன்முறையாக நடத்தப்பட்ட 'எக்சர்சைஸ் டைகர் பாம்', இருநாட்டு ராணுவங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் நீண்டகால பயிற்சி நடவடிக்கையாகும்.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலுக்குப் பிறகு இந்தப் பயிற்சி நேரடியாக நடத்தப்படுவது இதுவே முதன்முறை.
இதற்கு முன்னதாக 2019ல் இடம்பெற்ற நேரடிப் பயிற்சி நடவடிக்கையில் 700க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020ல் இந்தப் பயிற்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இது மெய்நிகர் வாயிலாக நடத்தப்பட்டது.
'எக்சர்சைஸ் டைகர் பாம்' ஒருபுறமிருக்க, சிங்கப்பூர், அமெரிக்க ராணுவங்கள் நிபுணத்துவப் பரிமாற்றத் திட்டங்கள் மூலமும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

