கடைத்தொகுதி ஒன்றில் இரண்டு வயதுச் சிறுமியிடம் கொடுத்த பலூனைக் காப்புறுதி முகவர் ஒருவர் திரும்பப் பெற்றுக்கொண்ட விவகாரத்தில் காப்புறுதி நிறுவனமான ஏஐஏ சிங்கப்பூர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
தெம்பனிசில் உள்ள செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து நஸ்ரின் ஒகிசி எனும் ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தம் மகளை அணுகிய காப்புறுதி முகவர், அவளிடம் பலூன் ஒன்றை வழங்கியதாக திருமதி நஸ்ரின் குறிப்பிட்டார்.
"என்னிடம் சில கேள்விகளைக் கேட்க முடியுமா என்று அந்த மாது கேட்டார். அவர் ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதை நான் அறிந்தேன்.
"எனினும், நான் அளித்த பதிலில் இருந்து, அவர்கள் தேடும் வாடிக்கையாளராக நான் இல்லாததை அறிந்த அந்த முகவர், மன்னிப்பு கூறிவிட்டு என மகளிடமிருந்து பலூனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்," என்று திருமதி நஸ்ரின் சொன்னார்.
பின்னர், இந்தச் சம்பவம் பற்றித் தெரியாத வேறொரு முகவர், தம் மகளிடம் பலூனை வழங்க முன்வந்ததாக திருமதி நஸ்ரின் கூறினார்.
தம் மகளிடம் பலூனை வழங்கி, பின்னர் அவர்கள் எதிர்பார்க்கும் வாடிக்கையாளராக தாம் இல்லை என்பதைக் கண்டறிந்ததும் பலூனைத் திரும்ப வாங்கிக்கொள்ளக் கூடாது என்று அந்த இரண்டாவது முகவரிடம் திருமதி நஸ்ரின் கூறினார்.
இதுகுறித்து தம் மேலாளரிடம் சென்று கேட்டு வந்த அந்த முகவர், தம் மகளிடம் பலூனை வழங்க இயலாது எனக் கூறிவிட்டதாக திருமதி நஸ்ரின் சொன்னார்.
இந்தச் சம்பவத்தை "அருவருப்பானது" என்று வர்ணித்த அவர், ஏஐஏ நிறுவனத்துடன் தாம் ஒருபோதும் காப்புறுதி எடுத்துக்கொள்ளப் போவதில்லை எனக் கூறினார்.
இதுகுறித்து ஏஐஏ சிங்கப்பூர் வெளியிட்ட அறிக்கையில், "விரும்பத்தகாத இந்த அனுபவத்துக்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம்," என்று கூறியது.

