நடப்பில் உள்ள விருது ஒன்றுக்கு காலஞ்சென்ற பொதுப் போக்கு
வரத்து மன்றத் தலைவர் ரிச்சர்ட் மேக்னஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'தலைசிறந்த அக்கறை செலுத்தும் பயணி விருது' இவ்வாறு பெயர் மாற்றம் காண்கிறது.
அன்றாட பொதுப் போக்கு
வரத்துப் பயணத்தின்போது இதர பயணிகளின் நலன்மீது அக்கறை செலுத்தக்கூடியவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அது இனிமேல் 'ரிச்சர்ட் மேக்னஸ் விருது' என்று அழைக்கப்படும்.
பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவராகவும் எஸ்ஜி பயணிகள் குழுத் தலைவராகவும் பணியாற்றிய திரு மேக்னசைக் கௌரவப்
படுத்த அவரது பெயர் விருதுக்கு சூட்டப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'அக்கறையுள்ள எஸ்ஜி பயணிகள்' இயக்கத்தை உருவாக்கிய திரு மேக்னசின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் அவரது பெயரில் விருது இடம்பெறுகிறது.
இந்த இயக்கத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திரு ஈஸ்வரன், எல்லாரையும் உள்ளடக்குவதுதான் பொதுப் போக்கு
வரத்து முறையின் இன்றியமையாத நோக்கம் என்றார். புக்கிட் மேராவில் உள்ள எனேபளிங் வில்லேஜில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
நமது பொதுப் போக்குவரத்தில் தடையற்ற, சொகுசான பயணங்களை எல்லாரும் அனுபவிக்கலாம். இன்னார்தான் இதனை அனுபவிக்க வேண்டுமென்றோ வயது, திறமை போன்ற பின்னணியோ தேவையில்லை.
"பேருந்துகளில் சக்கர நாற்காலி யுடன் பயணிகளை ஏற்றும் வசதி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் சேவை மையங்களில் மேம்படுத்தப்பட்ட, குரல் கேட்கும் வசதி போன்ற நடவடிக்கைகள் கடந்த பல ஆண்டு
களாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
"எல்லாவற்றையும் உள்ளடக்குவது என்பது வெறும் உள்கட்டமைப்புக்கு மட்டும் பொருந்தாது, மக்களும் அதனுள் அடக்கம்," என்றார் அமைச்சர் எஸ் ஈஸ்வரன்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி மாரடைப்பால் மாண்ட திரு மேக்னஸ், 77, அனைவரையும் உள்ளடக்கிச் செயல்படுவதை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்புடன் இருந்ததாக அவர் கூறினார்.
"நமது போக்குவரத்து முறையில் எல்லாரும், எல்லாமும் இடம்பெற வேண்டும் என்பதற்கான தேடுதலில் திரு ரிச்சர்ட் மேக்னஸ் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்.
"பல்லாண்டு காலம் அவருடன் வேலை செய்து, அவரது செயல்திறன்களைப் பற்றி அறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
"ஒருவர் மீது ஒருவர் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காக மக்களை ஒருங்கிணைப்பதில் திரு மேக்னஸ் எப்போதும் கவனம் செலுத்துவார்.
"அவரது பெயரில் அமையும் விருது அவரது எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கப் பயணிகளுக்கு தூண்டுதலாக விளங்கும் என்று நம்புகிறேன்," என்றும் திரு ஈஸ்வரன் தமது உரையில் குறிப்பிட்டார்.
திரு மேக்னசின் மகனான திரு கீத் மேக்னஸ், தமது தந்தையைக் கௌரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.
மக்கள் மீது அன்பு செலுத்து
வதையும் ஈவிரக்கம் காட்டுவதையும் எப்போதும் நோக்கமாகக் கொண்டவர் தமது தந்தை என்றார் அவர்.
திரு மேக்னஸ், பொதுப் போக்கு வரத்து மன்றத்தின் தலைவராக 2014 முதல் இவ்வாண்டில் மரணமடையும் வரை இருந்தார்.
அத்துடன், 2020 முதல் இவ்வாண்டு வரை, 'அக்கறை செலுத்தும் எஸ்ஜி பயணிகள் குழு'வின் தலைவராகவும் அவர் இருந்தார்.
2019ஆம் ஆண்டு திரு மேக்ன சின் தலைமைத்துவத்தின்கீழ் 'தலைசிறந்த அக்கறை செலுத்தும் பயணி விருதை' பொதுப் போக்கு வரத்து மன்றம் தொடங்கியது.
மறைந்த பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவரின் அரும்பணிகளுக்கு அங்கீகாரம்

