விடுதலையாகி ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் புரியும் முன்னாள் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் அதை முன்வைத்திருக்கிறார்.
கடந்த 2016ல் விடுவிக்கப்பட்ட முன்னாள் கைதிகளில் 41 விழுக்காட்டினர் ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் புரிந்து சிறை சென்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விகிதத்தைக் குறைக்க முன்னாள் கைதிகளுக்கான குற்றத் தவிர்ப்பு ஆதரவுக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
குற்றச்செயல்களில் ஈடுபடாமல் வாழ்க்கையை உருமாற்றிய முன்னாள் கைதிகள் தங்கள் வாழ்வைப் புனரமைத்து வரும் முன்னாள் கைதிகளுக்கு ஆதரவு வழங்குவர்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் கைதிகளின் உதவியுடன் சமூகத்தினரின் உதவியும் பெறப்படும். ஆதரவு வழங்குவோருக்குத் தேவையான திறன்பயிற்சியும் அளிக்கப்படும்.
சிங்கப்பூர் சிறைத் துறை, மஞ்சள் நாடா சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றின் பணித்திட்டங்களை எடுத்துரைத்த நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டபோது இணைப் பேராசிரியர் ஃபைஷல் பேசினார்.
சென்ற 2019ஆம் ஆண்டில் விடுதலை ஆனவர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே, விடுவிக்கப்பட்ட ஈராண்டுகளுக்கு மீண்டும் தடுத்துவைக்கப்பட்டனர் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். அல்லது அவர்களுக்கு ஒரு நாள் முன்னிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் காணப்பட்ட ஆகக் குறைந்த விகிதம் ஆகும்.
அத்துடன், பிற நாடுகளை ஒப்பிடும்போதும் இது குறைவானது என்று இணைப் பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.
முன்னாள் கைதிகள் மறுவாழ்வு பெற, கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'டேப்' எனப்படும் திறன்பயிற்சி, வேலைத் திட்டம் கைகொடுத்து உதவி வருவதை இணைப் பேராசிரியர் ஃபைஷல் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் இருந்தவாறு முன்னாள் கைதிகள் கல்வியும் பயிற்சியும் பெறும் வேலை ஆயத்தத் திட்டமும் இவ்வாண்டு தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

