வழக்கு நடைபெறும்போது வெளிநாடு செல்ல ஐரிஸ் கோ அனுமதி கேட்டார்
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிரான 'ஹீலிங் தி டிவைட்' குழுவைத் தோற்றுவித்த ஐரிஸ் கோவுக்கு எதிரான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவர் மலேசியாவுக்குச் செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார். தைராய்டு சுரப்பி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி அவர் அனுமதி கோரியுள்ளார்.
ஆனால் மாவட்ட நீதிபதி இங் பெங் ஹொங், அந்த வழக்கை வரும் 22ஆம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார். 46 வயது திருவாட்டி கோவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிய நீதிபதி, மேல்விவரங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
திருவாட்டி கோவின் தைராய்டு சுரப்பிகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர் என்றும் வெளிநாட்டு மருத்துவர்களிடம் கருத்துக்கேட்க அவர் விரும்புவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
டாக்சி ஓட்டுநர்களை பலமுறை
தாக்கியவருக்கு ஐந்து வாரம் சிறை
ஏற்கெனவே பலமுறை டாக்சி ஓட்டுநர்களைத் தாக்கிய ஆடவர் ஒருவர், சிறையிலிருந்து விடுக்கப்பட்ட பின்னர் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் டாக்சி ஓட்டுநர்களைத் தாக்கினார். ஒவ்வொரு சம்பவத்திலும் அவர் டாக்சி கட்டணங்களையும் செலுத்த மறுத்தார்.
அந்தச் சம்பவங்கள் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை நடைபெற்றன.
குற்றம் புரியும் நோக்கத்துடன் வன்முறையைப் பயன்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை 33 வயது டான் வீ மிங் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர் டாக்சி கட்டணங்களைச் செலுத்த மறுத்ததும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
டானுக்கு ஐந்து வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பற்றிய மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஜூன் மாதம் முழுவதும் மழை
கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் மழை இந்த மாத இறுதி வரை தொடரும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. அன்றாட வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் நிலையம் கூறியது.
சில நாள்கள் மட்டும் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசைத் தாண்டும். சில இரவுகளிலும் வெப்பமாக இருக்கும். குறிப்பாக தீவின் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் அவ்வாறு காணப்படும்.
தென்கிழக்குக் காற்று கடலிலிருந்து நிலம் நோக்கி வந்து வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த காற்றாக வீசும் என்பதே அதற்குக் காரணம். அதுபோன்ற இரவுகளில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் கூறியது.

