முரசொலி
தெற்கு ஆசிய நாடான இந்தியா நிலப்பரப்பில் உலகிலேயே ஏழாவது ஆகப் பெரிய நாடு. மக்கள் தொகையில் இரண்டாவது ஆகப் பெரிய நாடு. மிகப் பிரபலமான மிகப்பெரிய ஜனநாயக நாடு.
பொருளியலைப் பொறுத்தவரை உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு. சந்தை பரிவர்த்தனை விகிதங்களின்படி, இந்தியா உலகின் ஆறாவது ஆகப் பெரிய நாடாக இருந்து கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 5.5% வளர்ச்சி கண்டுவரும் நாடு. விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள நாடு.
அந்த நாட்டில் சுமார் 139 கோடி மக்கள் வசிக் கிறார்கள். இளையர்கள் அதிகம். அவர்கள் அதிக தொழில்நுட்ப நாட்டம் உடையவர்கள். அதே வேளை யில் வயதான நடுத்தர வயதிலான தொழில்நுட்ப நாட்டம் குறைவான மக்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாருக்கும் நிரந்தர வேலை வாய்ப்பு களை உருவாக்க அரசாங்கம் முடியாது என்பது நடைமுறை உண்மை. ஆனாலும் தன் சூழலுக்கு ஏற்ப இந்திய அரசு பல்வேறு வகை வேலை வாய்ப்பு களை உருவாக்கி வருகிறது. படிக்காத, கிராமப் புற வயதான, நடுத்தர வயது ஆண்கள், பெண்களுக்காக நாளுக்கு 275 ரூபாய் ஊதியத்துடன் 100 நாள் வேலை திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதேபோல் தொழில்நுட்ப நாட்டத்துடன்கூடிய இளையர்களின் வளம் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 'அக்னிப் பாதை' என்ற ஒரு திட்டத்தை இம்மாதம் மாதம் 14ஆம் தேதி அமைச்சரவை அங்கீகரித்தது. அந்தத் திட்டம் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடிமக்கள் அனைவருக்கும் நிரந்தரமான வேலை வாய்ப்பை எந்த ஒரு நாடும் ஏற்படுத்தித் தர இயலாது என்பது திண்ணம். இளையர்களுக்கு குறிப்பாக 17.5 வயது முதல் 23 வரை வயதுள்ள இளையருக்கு குறுகிய காலகட்டத்திற்காவது வேலை கொடுத்தாக வேண்டும் என்பதால் அரசு அதற்கான ஏற்பாடாக அக்னிப் பாதை திட்டத்தை அறிவித்தது.
ஆற்றல்மிக்க இளையர்களுக்கு நான்கு ஆண்டு காலம் ராணுவத்தில் வேலை கொடுத்து, அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குப் புதிய புதிய தகவல் தொழில்நுட்பங்களைப் போதித்து, நாட்டுப் பற்றை, ஆக்ககரமான மனப்போக்கை வளர்த்து கையில் போதிய அளவுக்கு-அதாவது ஏறக்குறைய 1.3 மில்லியன் ரூபாய் பணத்தையும் கொடுத்து புடம் போட்ட தங்கக் குடிமகனாக ஆக்கி சமூகத்திடம் ஒப்படைக்கும் விதத்தில் அத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அக்னிப் பாதை திட்டத்தின்படி ஆண்டுக்கு 46,000 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மாதச் சம்பளம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இருக்கும். அவர்களில் ஆற்றல் மிகுந்த கால்வாசிப் பேருக்கு ராணுவத்தில் தொடர்ந்து மேலும் 15 ஆண்டுகாலம் பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்படும்.
இந்திய ராணுவம் 1.4 மில்லியன் வீரர்களைக் கொண்டது. ராணுவ வீரர்கள் பொதுவாக 17 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறு கிறார்கள். ராணுவத்தின் செலவில் ஓய்வூதியச் செலவு தாக்குப்பிடிக்க இயலாத நிலையை எட்டி விட்டது. இதைக் குறைக்க வேண்டும் என்பதும் அக்னிப் பாதையின் நோக்கம்.
ஆனால் அக்னிப் பாதை திட்டம் அதற்குள்ளாகவே அக்னிப் போராட்டமாக மாறிவிட்டது. எங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும், ஓய்வூதியம் வேண்டும்; இதர அரசு ஊழியர்களைப் போலவே வாழ்க்கை முழுமைக்கும் உத்தரவாதம் வேண்டும் என்று இளையர்கள் கேட்கிறார்கள்.
ஏற்கெனவே ராணுவத்திற்கு வழக்கமான நடைமுறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வருவோர், தங்கள் கதி என்ன ஆகுமோ என்று அச்சப்படுகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
வெறும் ஆறே மாதம் பயிற்சி கொடுத்து ராணுவத்திற்குத் தற்காலிகமாக வீரர்களைச் சேர்க்கும் அக்னிப் பாதைத் திட்டம் இந்திய ராணுவத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்று சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்து கூறுகிறார்கள்.
இவை எல்லாம் சேர்ந்து அதற்குள்ளாகவே அக்னிப் பாதை திட்டத்தை அக்னி போராட்டமாக மாற்றிவிட்டன. பீகாரில் தொடங்கிய போராட்டம் வன்செயலாக மாறியது. எட்டு மாநிலங்களுக்குப் பரவி, ரயில்கள், பேருந்துகள் அழிக்கப்பட்டன. அரசாங்கச் சொத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. நிலைமை துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குப் போய் ஒருவர் பலியாகிவிட்டார்.
உலக அளவில் பொருளியல், சமூக சூழ்நிலைகள் எவ்வளவோ மாறிவிட்டன. மாறி வருகின்றன. போதாதற்கு கொவிட்-19 தொற்று பலவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த மாற்றங்கள் அந்த நாட்டின் மக்களை முழுமையாகச் சென்று அடைந்து இருக்கின்றனவா என்பது சந்தேகமாகவே உள்ளது.
எந்த ஓர் அரசாங்கமும் அதுவும் இந்தியா போன்ற பன்மய நாட்டை ஆளும் அரசாங்கம் எதுவும் தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் நிரந்தரமாக வேலை வாய்ப்புகளை அளித்து ஓய்வு பெற்று மரணம் அடையும்வரை அவர்களின் வருவாய்க்கு வழி செய்யும் என்பது இனி நினைத்துப் பார்ப்பதுகூட இயலாததாகவே இருக்கும்.
இதை குறிப்பாக இந்திய இளையர்கள் உணரவேண்டும். இளையர்களின் சக்தி இமாலய சச்தி. அந்த சக்தி இப்போது முற்றிலும் ஆக்க சக்தியாக இல்லை. அழிவு சக்தியாக ஆவதில் எந்தப் பயனும் இல்லை. ஓர் அரசு அமல்படுத்தும் ஒரு திட்டம் அதிக பயன் தராத ஒரு திட்டமாக இருக்கும் என்றாலும்கூட அதை எதிர்ப்பவர்கள் வன்செயல்களில், அழிவு செயல்களில் ஈடுபடக்கூடாது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இளைஞர்கள் அழிவு சக்தியாக மாறுவது அந்த நாட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அக்னிப் பாதை திட்டத்தின் நன்மை, தீமைகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அந்தத் திட்டம் விரும்பிய பலனை ஏற்படுத்தித் தராது என்பது திட்டவட்டமாகத் தெரியவந்தால் அரசாங்கம் அதைக் கைவிட வேண்டும் அல்லது திருத்தங்களைச் செய்ய வேண்டும். அக்னிப் பாதை வீரர்களுக்கு மத்திய ராணுவ காவல் படை, அசாம் ரைஃபிள் படையில் 10% இடம் ஒதுக்கப்படும் என்று நேற்றுகூட மேலும் சலுகைகளை அரசு அறிவித்தது.
அந்தத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினருமே போதிய அவகாசத்தைத் தரவேண்டும். அதற்குள்ளாக வன்செயல்களில் இறங்கி அரசாங்கச் சொத்துகளை அழிப்பது எந்த விதத்திலும் யாருக்கும் பலன் தராது என்பதை இளையர்கள் உணரவேண்டும்.

