பெரிய, கலப்பு இன நாய்களையும் கே9 மோப்ப நாய்களையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு உரிமையாளர்கள் தத்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் ஒரு முன்னோடித் திட்டம் நிரந்தர திட்டமாக ஆகி இருக்கிறது.
அந்தத் திட்டம் இரண்டாண்டு காலம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அத்தகைய 260க்கும் மேற்பட்ட நாய்கள் வீவக வீட்டு உரிமையாளர்களால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டன.
பரிசோதனைக் காலத்தில் 'அடோர்' திட்டத்தின்கீழ் தத்தெடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து வகை நாய்களிலும் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவை இத்தகைய நாய்களாக இருந்தன.
வீவக வீடுகளில் நடுத்தர, கலப்பு இன நாய்களைத் தத்தெடுத்து வளர்க்க அடோர் திட்டம் அனுமதிக்கிறது. அத்திட்டத்திற்கு விலங்கு கால்நடை சேவை அமைப்பு தலைமை ஏற்று இருக்கிறது.
பீஷான், அங் மோ கியோ பூங்காவில் நேற்று 14வது செல்லப் பிராணிகள் தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அந்த இரண்டாண்டு முன்னோடித் திட்ட மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
செல்லப் பிராணிகள் தினம், 2019ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை நடந்து வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் விலங்கு நல்வாழ்வு அமைப்புகள், நிபுணர்கள், நிறுவனங்கள், கால்நடைத் துறை வல்லுநர்கள், செல்லப் பிராணி விரும்பிகள் பலரும் ஒன்று சேர்கிறார்கள்.
தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அடோர் திட்டத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
முன்னோடித் திட்டம் நடப்பில் இருந்தபோது பொதுமக்களிடம் இருந்து பல தகவல்கள் பெறப்பட்டன. நாய்கள் குரைக்கும் சத்தம், நாய்களை அவிழ்த்துவிடுவது ஆகியவையே பொதுமக்கள் தெரி வித்த புகார்களில் பெரும்பாலானவையாக இருந்தன.
இத்தகைய புகார்களுக்கு எளிதாக தீர்வு காண முடியும் என்றும் பிரச்சினை எழாமல் நாய்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசிய விலங்கு கால்நடை சேவை அமைப்பின் விலங்கு நிர்வாக நிலையத்தின் இடைக்கால இயக்குநரும் செயல்திட்ட இயக்குநருமான வெய்ன் குய் தெரிவித்தார்.
நாய்களின் உயரத்திற்கு உள்ள கட்டுப்பாடும் கடைசியில் அகற்றப்படுமா என்பதன் தொடர்பில் வீவகவுடன் சேர்ந்து பொதுமக்களின் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

