ஜெர்மனி சென்றிருக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே நேற்றுக் காலை தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். சனிக்கிழமை பெர்லின் நகரில் இருந்தபோது தமக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஜூன் 12ஆம் தேதி லண்டன் சென்ற திரு ஹெங் (படம்), 'லண்டன் டெக் வீக்' என்னும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டார். ஜூன் 16ஆம் தேதி பெர்லின் சென்று சேர்ந்தார். தமது பயணம் முழுவதும் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் தொடர்ந்தபோதிலும் தொற்று ஏற்பட்டுவிட்டதாக அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
"காலையில் எழுந்திருக்கும்போது தொண்டை வறட்சி இருந்தது. என்னிடம் காணப்படும் அறிகுறிகள் கடுமையானவையாக இல்லை. நல்லவேளையாக நான் மூன்று தடுப்பூசிகளையும் போட்டுள்ளேன்," என்றார் திரு ஹெங்.
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல் ஒன்றில் அவர் தனிமையில் உள்ளார்.
பயணத்தின் இறுதிக்கட்டமாக சுவிட்சர்லாந்து சென்று அங்கு நடைபெறும் 'பாயிண்ட் ஸீரோ' கருத்தரங்கில் திரு ஹெங் பங்கேற்பதாக இருந்தது. இதில் பங்கேற்க இயலாமமைக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக நிதிக்கான சுவிஸ் செயலகமும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் லாப நோக்கமற்ற அமைப்பான 'எலிவென்டி'யும் இணைந்து நடத்தும் 'பாயிண்ட் ஸீரோ' கருத்தரங்கு சூரிக் நகரில் நாளை (ஜூன் 21) முதல் வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.