சிங்கப்பூரின் புதிய இணைய விதிமுறைகளின்கீழ் ஃபேஸ்புக், டிக்டோக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் கூடிய விரைவில் மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளிடமிருந்து இணையத்தைப் பயன்படுத்துவோரைப் பாதுகாக்க சமூக தரநிலை மற்றும் கருத்துச் செயல்முறைகளை அவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, 18 வயதுக்கும் குறைவானோரைப் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தகாத கருத்துகள், தேவையில்லாத தொடர்புகள் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள இளையர்
களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் உதவும் அம்சங்கள் இருப்பதை சமூக வலைத்தளங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அபாயகரமான செயல்களில் ஈடுபட இணையவாசிகளைத் தூண்டும் 'காணொளிச் சவால்கள்', இணையம் மூலம் நேரடியாக ஒளி
பரப்படும் பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்
படக்கூடும் என்று தொடர்பு, தகவல் அமைச்சு நேற்று கூறியது.
இணையம் மூலம் ஏற்படக்கூடிய தீங்கு காரணமாக சிங்கப்பூருக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமைச்சு எச்சரிக்கை விடுத்தது.
பிற சமயங்கள், இனங்கள் ஆகியவற்றைத் தூற்றும் கருத்துகளை இணையம் மூலம் பரப்பி சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய, இன மக்களிடையே பிளவு ஏற்படக்கூடும்.
சன்லைட் அலயன்ஸ் ஃபார் ஆக்ஷன் இணையம் மூலம் நடத்திய ஆய்வை அமைச்சு சுட்டியது. ஆய்வில் பங்கெடுத்த சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் இணையம் மூலம் விளைவிக்கப்படும் தீங்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிரபல சமூக ஊடகச் சேவைகள் மூலம், இணையம் மூலம் ஏற்படும் அபாயங்களை 61 விழுக்காட்டினர் எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் பற்றிய சில விவரங்களை தொடர்பு, தகவல்
அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பகிர்ந்துகொண்டார்.
"இணைய பாதுகாப்பை மேம்
படுத்த உலகளாவிய நிலையில் குரல்கள் வலுக்கின்றன. இணையம் மூலம் தீங்கு ஏற்படாமல் இருக்க பல நாடுகள் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. சில நாடுகள் இத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன," என்று அமைச்சர் டியோ தெரிவித்தார். இணையப் பாதுகாப்பை வலுப்
படுத்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகளுடனும் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ள நாடுகளுடனும் சிங்கப்பூர் இணைந்து செயல்படுகிறது.
ஆலோசனை, ஒத்துழைப்பு அணுகுமுறை மூலம் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் விரும்புவதாக அவர் கூறினார்.
மற்ற நாடுகளின் அனுபவங்
களிலிருந்து கற்றுக்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அத்துடன், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்கள் தொடர்பாக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் டியோ கூறினார்.
"தொழில்நுட்ப ரீதியாக சாத்தியப்படும் நடவடிக்கைகளை எடுக்க இந்த அணுகுமுறை கைகொடுக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாத தொடக்கத்திலிருந்து தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தொடர்பு, தகவல் அமைச்சு தெரிவித்தது.
பொதுமக்களிடம் நடத்தப்படும் ஆலோசனை அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு இணையம் மூலம் தீங்கு ஏற்படாதிருக்க, சமூக ஊடகச் சேவைகளுக்கு வழிகாட்ட தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.

