சிங்கப்பூரில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குக் கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது குறித்துச் சுகாதார அமைச்சும் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான வல்லுநர் குழுவும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஃபைஸர் பையோஎன்டெக்', 'மொடர்னா' ஆகிய இரு தடுப்பூசிகளின் பாதுகாப்பு, சிறுவர்களிடம் இந்த மருந்துகளின் செயல்திறன் ஆகியவற்றை ஆய்வுசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
'மொடர்னா' தடுப்பூசியை ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்குச் செலுத்துவது பற்றியும், 'ஃபைஸர்' தடுப்பூசியை ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும் செலுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
சென்ற வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு இந்த இரு தடுப்பு மருந்துகளையும் ஆறு மாதக் குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று அனுமதி அளித்த தகவல் வெளியான பிறகு சுகாதார அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.
அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசிகளைச் சிறாருக்குச் செலுத்தும் திட்டம் இந்த வாரம் தொடங்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சிறாருக்குச் செலுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மை, தீமை குறித்து மருந்து உற்பத்தியாளருடன் இணைந்து ஆய்வு செய்யப்படுவதாகச் சுகாதார அமைச்சு கூறியது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'ஃபைஸர் பையோஎன்டெக்', 'மொடர்னா' ஆகிய இரு தடுப்பூசிகளையும் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்குச் செலுத்த சிங்கப்பூர் அனுமதி வழங்கியது. ஆனால் மருந்தின் அளவு பெரியவர்களுக்குச் செலுத்துவதைப் போன்று மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லு லின் மருத்துவக் கல்லூரி, டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பல்வேறு சிறுவர்களிடையே இந்தத் தடுப்பு மருந்துகள் உருவாக்கும் கொவிட்-19 நோய் எதிர்ப்புச்சக்தி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மருந்தின் பக்கவிளைவுகள், செயல்திறன் ஆகியவை கண்காணிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

