புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையை மீண்டும் இருவழிகளிலும் விரைந்து தொடங்கவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் வலியுறுத்தி வருவதாக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை போக்குவரத்து உச்சம் அல்லாத நேரங்களில் ஒருவழியில் மட்டும் செயல்படுகிறது. பயணிகள் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர்.
2019ஆம் ஆண்டு இலகு ரயில்பாதை புதுப்பிக்கப்படுவதால் தற்காலிக மாற்றங்கள் இடம்பெறும் என்று ஆணையமும் 'எஸ்எம்ஆர்டி' நிறுவனமும் தெரிவித்திருந்தன.
இந்த மாற்றங்கள் 2024ஆம் ஆண்டு வரை நடப்பில் இருக்கும் என்று அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இருவழிச் சேவை இல்லாததால் தாங்கள் சிரமப்படுவதாகக் குடியிருப்பாளர்கள் தம்மைச் சந்திக்க நேரும்போதெல்லாம் அடிக்கடி கவலை தெரிவிப்பதாகத் திரு லியாங் கூறினார். இலகு ரயில் சேவையில் அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டதால் புதுப்பிப்புக்குத் திட்டமிடப்பட்டது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெற்றால் புதிய ரயில்களும் மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை முறையும் சேவை வழங்கத் தொடங்கும்.
இது புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
எனவே இடையூறுகள் ஏற்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல் இருவழிச் சேவையை உடனே தொடங்கவேண்டுமா அல்லது 2024ஆம் ஆண்டு வரை தற்போதைய ஒருவழிச் சேவையைத் தொடரலாமா என்பது குறித்து ஆக்ககரமான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்றார் திரு லியாங். இருப்பினும் போக்குவரத்துத் துறை வல்லுநர்களின் அறிவுரைக்குத் தாம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

