2050ஆம் ஆண்டிற்குள் கரிமமற்ற நிலையை எட்ட இலக்கு
இவ்வாண்டு அக்டோபருக்குள் 'டிஎச்எல் எக்ஸ்பிரஸ்' தளவாட நிறுவனத்திடம் கூடுதலாக 80 மின்சார வாகனங்கள் இருக்கும். அதைச் சேர்த்து, இந்நிறுவனத்திடம் உள்ள மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயரும். இந்நிறுவனத்திடம் இங்கு 390 விநியோக வாகனங்கள் உள்ளன.
கிரீன்விச் டிரைவில் உள்ள டிஎச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியானது. போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
டிஎச்எல் நிறுவனத்தின் அன்றாட பயணப் பாதைகளில் 30 விழுக்காட்டை இந்த மின்சார வாகனங்கள் உள்ளடக்கும்.
"மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம், ஆண்டுக்கு 323 டன் கரியமில வாயு வெளியேற்றத்தை டிஎச்எல் எக்ஸ்பிரஸ் குறைக்கும்," என்று டிஎச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்தஃபர் ஓங் தெரிவித்தார்.
முழுமையாக மின்னூட்டம் செய்யப்பட்ட வாகனத்தால் 339 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.
இந்த 80 மின்சார வாகனங்களும் 'கம்ஃபர்ட்டெல்குரோ ரெண்ட்-ஏ-கார்' நிறுவனத்துடனான ஐந்து ஆண்டுகால குத்தகையிலும் பராமரிப்பு ஒப்பந்தத்திலும் உள்ளன.
புதிய மின்சார வாகனங்களுக்கு மின்னூட்ட வசதிகளை வழங்க, டிஎச்எல் பராமரிப்பு நிலையங்களில் 105 மின்னூட்டிகள் பொருத்தப்படும்.
மின்னூட்ட வசதிகளை வழங்கும் தனியார் நிறுவனமான 'இவிஓன் சார்ஜிங்', இந்த 7 கிலோவாட் 'ஏசி' மின்னூட்டிகளை வழங்கி அவற்றைப் பொருத்துகிறது.
வேகமான, அதிக எரிசக்தியைப் பயன்படுத்தும் 'டிசி' மின்னூட்டிகளுக்குப் பதிலாக 'ஏசி' மின்னூட்டிகளைப் பயன்படுத்துவதால், டிஎச்எல் பராமரிப்பு நிலையங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு மின்சார விநியோகக் கட்டமைப்புக்குப் பெரிய அளவில் மேம்பாடு தேவை இராது.
மூன்று மணி நேரம் மின்னூட்டம் செய்வதால் மின்சார வாகனத்தால் கூடுதலாக 85 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மின்கலனை முழுமையாக மின்னூட்டம் செய்வதற்கு கிட்டத்தட்ட 11 மணி நேரம் எடுக்கும்.
மின்சார வாகனங்களின் மின்னூட்ட ஆற்றலைப் பரிசோதித்து, அவற்றைப் பயன்படுத்துவதில் அனுபவத்தைப் பெற, இவ்வாண்டு ஜனவரியில் டிஎச்எல் நிறுவனம் 10 மின்சார வாகனங்களைச் சோதித்துப் பார்த்தது.
2050க்குள் கரிமமற்ற நிலையை எட்ட டிஎச்எல் நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. மேலும், 2030க்குள் தன் விநியோக வாகனங்களின் எண்ணிக்கையில் 60 விழுக்காட்டை மின்சாரமயமாக்க டிஎச்எல் விரும்புகிறது.
கூடுதலான வாகனங்களை மின்சாரமயமாக்கும் முயற்சியில் சிங்கப்பூர் இறங்கியுள்ளது. 2030க்குள் நாட்டின் பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையில் பாதி அளவு மின்சாரமயமாக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அண்மையில் கூறி இருந்தது. மின்கலங்களில் இயங்கும் டாக்சிகள், எட்டு ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்க அனுமதி வழங்கப்படுகின்றன.
வர்த்தக வாகனங்களை வாங்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், வழக்கமான வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுகின்றன.

