சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்துக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் டெசாரு கோஸ்ட் படகு முனையத்துக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள நேரடி படகுச் சேவை செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது.
'பாத்தாம்ஃபாஸ்ட்' நிறுவனம், மார்ச் 23ஆம் தேதி படகு சேவைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது.
புதிய படகு பயணப் பாதையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யுமாறு 'பாத்தாம்ஃபாஸ்ட்' நிறுவனத்திடம் ஆணையம் கேட்டுக்கொண்டது. பயணச் சேவை வழங்குவதற்கு படகுகள் தகுதி பெற்றுள்ளதை அதிகாரிகள் சான்றளிப்பதும் இந்த மதிப்பீட்டில் அடங்கும்.
தானா மேரா, டெசாரு படகு முனையங்களுக்கு இடையிலான பயணப் பாதையை உள்ளடக்கும் அவசரகால பதில் நடவடிக்கையையும் 'பாத்தாம்ஃபாஸ்ட்' வழங்க வேண்டும்.
தேவையான விவரங்களை 'பாத்தாம்ஃபாஸ்ட்' சமர்ப்பித்தவுடன், முன்மொழியப்பட்ட படகுச் சேவைக்கான பாதுகாப்பு விதிமுறைகளை 'பாத்தாம்ஃபாஸ்ட்' பூர்த்திசெய்ததா என்பதை ஆணையம் மதிப்பீடு செய்தது.
முன்மொழியப்பட்ட படகுச் சேவையை நடத்த 'பாத்தாம்ஃபாஸ்ட்' நிறுவனத்தின் விண்ணப்பத்துக்கு தான் ஒப்புதல் அளித்துள்ளதாக 'பாத்தாம்ஃபாஸ்ட்', ஜோகூர் துறைமுக ஆணையம், மலேசிய கடல்துறை ஆகியவற்றிடம் ஆணையம் நேற்று தெரியப்படுத்தியது.
புதிய படகுச் சேவை எப்போது தொடங்கும் என்பது, செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான 'பாத்தாம்ஃபாஸ்ட்' நிறுவனத்தின் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகளைப் பொறுத்துள்ளது.
மற்ற ஆணையங்களிடம் இருந்து தேவையான ஒப்புதலைப் பெறுவதும் இந்தப் பணிகளில் அடங்கும்.

