பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருக்குக் குரங்கம்மை தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஆடவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 13 பேர், 21 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
42 வயது விமானச் சிப்பந்தியான அந்த ஆடவர் இம்மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்தார். அவர் மீண்டும் 19-ஆம் தேதி சிங்கப்பூருக்குள் வந்து சென்றார் என்று சுகாதர அமைச்சு தெரிவித்தது.
அவர் தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் சீரான உடல்நிலையில் உள்ளதாகவும் அமைச்சு கூறியது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத இருவர், தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர்.
பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆடவர் சிங்கப்பூரில் இருந்தபோது பெரும்பாலும் தங்கும் விடுதிகளில் தங்கி இருந்ததால் கிருமி உள்ளூரில் பரவுவதற்கான அபாயம் குறைவே என்று சுகாதார அமைச்சு கூறியது.
அவர் சென்ற நான்கு இடங்களிலும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.