கொவிட்-19 கிருமிப்பரவலைத் தடுக்கும் நோக்கில் 2020ஆம் ஆண்டு தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியை விட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
வேலையிடங்களுக்கு முதலாளிகளே ஏற்பாடு செய்யும் போக்குவரத்தில் மட்டுமே இவர்கள் சென்றனர். விடுமுறை அல்லது ஓய்வு நாள்களில்கூட அவர்கள் விடுதிக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை.
ஏறக்குறைய 17 மாதங்களுக்குப் பிறகு சென்ற ஆண்டு செப்டம்பரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. முன்னோடித் திட்டத்தின்கீழ் ஒரு வாரத்தில் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 500 வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ‘எக்ஸிட் பாஸ்’ எனும் அனுமதிக்கு இவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வார நாள்களில் 25,000 பேரும், வாரயிறுதி நாள்களிலும் பொதுவிடுமுறை நாள்களிலும் 50,000 பேரும் வெளியிடங்களுக்குச் செல்லலாம் என்று மனிதவள அமைச்சு அறிவித்தது. வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியே செல்ல வெள்ளிக்கிழமை முதல் ‘எக்ஸிட் பாஸ்’ அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதில் லிட்டில் இந்தியா, சைனா டவுன், கேலாங் செராய், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலோ பொது விடுமுறை நாள்களிலோ செல்ல விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் ‘பாப்புலர் பிளேஸ் பாஸ்’ எனும் அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு நாளில் மொத்தம் 80,000 பேருக்கு இத்தகைய அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது. சென்ற ஞாயிற்றுக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய வெளிநாட்டு ஊழியர்களில் பலரும் ‘எக்ஸிட் பாஸ்’ இல்லாமலே தாங்கள் வெளியில் வந்திருப்பதாகக் கூறினர். 10 விழுக்காட்டினருக்கு நாளை நடப்புக்கு வரும் புதிய நடைமுறை குறித்தும் தெரிந்திருக்கவில்லை.
சிலர் ‘எக்ஸிட் பாஸ்’ விண்ணப்ப முறை குழப்பம் அளிப்பதாகக் கூறினர்.
சிங்கப்பூர் சமூகத்தின் இதர தரப்பினரைப் போன்றே வெளிநாட்டு ஊழியர்களும் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லவும் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வெளிநாட்டு ஊழியர் நல அமைப்புகள் கோருகின்றன.
சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றுகூடிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடப்புக்கு வரும் மாற்றம் குறித்து மனிதவள அமைச்சின் அதிகாரிகள் எடுத்துக்கூறுவதைக் காண முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. தங்கும் விடுதிகளுக்கு இதுகுறித்த துண்டுப் பிரசுரங்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கடந்த ஈராண்டுகளாக அரசாங்கத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதால் கிருமிப்பரவலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வது குறித்து நன்றாகவே அறிந்துவைத்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.