கடந்த வாரயிறுதியில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக பயணம் செய்தோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 278,000 ஆக அதிகரித்தது. ஒப்புநோக்க, அதற்கு முந்தைய வாரயிறுதியில் இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 267,000 ஆக இருந்தது. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று இதைத் தெரிவித்தது.
விசாக தின வாரயிறுதியில் நாள் ஒன்றுக்கு 224,000 பேரும் புனித வெள்ளி வாரயிறுதியில் நாள் ஒன்றுக்கு 149,000 பேரும் பயணம் செய்திருந்தனர்.
ஜூன் பள்ளி விடுமுறை தொடங்கியதில் இருந்து உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதாக ஆணையம் கூறியது.
எனவே, மாத இறுதிவரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என ஆணையம் எதிர்பார்க்கிறது.
"தற்போதைய சூழலில் பயணத்தில் தாமதம் ஏற்படுவதைப் பயணிகள் எதிர்பார்க்கலாம். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க, முடிந்த அளவிற்கு தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்," என்று ஆணையம் சொன்னது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூரில் இருந்து புறப்படுவோர், கார்கள் செல்வதற்கான ஜோகூர் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஜூன் 6ஆம் தேதிமுதல் புதுப்பிக்கப்பட்டு வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆணையம் கூறியது. புதுப்பிக்கப்படும் சாவடிகள் செயல்பாட்டில் இருக்கமாட்டா.
தவிர்க்க வேண்டிய உச்ச நேரங்கள்
குடிநுழைவுச் சோதனையைக் கடக்க கூடுதல் நேரம் செலவிடுவதைக் கருத்தில் கொள்ளுமாறும் கீழ்க்காணும் உச்ச நேரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது:
சிங்கப்பூரிலிருந்து புறப்படுவது
- சனிக்கிழமை (ஜூன் 25): காலை 6 மணி முதல் 9 மணி வரை, இரவு 9 மணி முதல் 11.59 மணி வரை.
- ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26): காலை 6 மணி முதல் 8 மணி வரை.
சிங்கப்பூருக்கு வருவது
- இன்று (ஜூன் 23), நாளை (ஜூன் 24):
இரவு 10 மணி முதல் 11.59 மணி வரை.
- சனிக்கிழமை (ஜூன் 25):
இரவு 9 மணி முதல் 11.59 மணி வரை.
- ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26):
மாலை 6 மணி முதல் இரவு 11.59 மணி வரை.